கூடங்குளம் அணு உலைகள் மூலம் தமிழகத்திற்கு எத்தனை மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் தெரியுமா?
தூத்துக்குடி: கூடங்குளத்தி அமைக்கப்பட்டுள்ள 2வது அணுஉலையில் நேற்று இரவு முதல் மின்சார உற்பத்தி தொடங்கி உள்ளது. முழு மின் உற்பத்தியை எட்டுபொழுது, தமிழகத்துக்கு 562 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல் அணு உலை மூலம் தமிழகத்திற்கு அதிகபட்சமாக, 562.5 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்திய-ரஷியா கூட்டு முயற்சியில் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உலைகளில் முதலாவது அணு உலையில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் அணுப் பிளவு நடத்தப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. தற்போது1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக முழு கொள்ளளவு எட்டப்பட்டு, வர்த்தக ரீதியான உற்பத்தியும் தொடங்கி மத்திய தொகுப்பில் இணைக்கப்பட்டு ஆந்திரம், கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.
தமிழகத்திற்கு உரிய பங்காக, 462.5 மெகாவாட், புதுச்சேரிக்கு, 33.5 மெகாவாட், கேரளாவுக்கு, 133 மெகாவாட், கர்நாடகாவிற்கு, 221 மெகாவாட், ஒதுக்கீடு செய்யப்படாத மின்சாரம், 150 மெகாவாட் என இருந்தது. ஒதுக்கீடு செய்யப்படாத உபரி மின்சாரத்தில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக, 100 மெகாவாட் சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்திற்கு அதிகபட்சமாக, 562.5 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2வது அணு உலை
2ஆவது உலையிலும் மின் உற்பத்திக்கான பணிகளைத் தொடங்கியது அணு உலை நிர்வாகம். முதல் உலை உற்பத்தி தொடங்கிய 6 மாதங்களிலேயே 2ஆவது உலையில் உற்பத்தி தொடங்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், முதல் உலையில் மின் உற்பத்தி தொடங்கி 3 ஆண்டுகளுக்குப் பிறகே 2ஆவது உலையில் உற்பத்திக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டன.
நீராவி சோதனை
இதன்படி, கடந்த மே 18ஆம் தேதி உலையில் எரிபொருளான யுரேனியம் நிரப்பும் பணி நடைபெற்றது. எரிபொருள் முழுவதும் நிரப்பப்பட்டு அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் உரிய அனுமதி பெற்று நீராவி வெளியேற்றும் சோதனை நடத்தப்பட்டது. ஜூன் 18, 19, 20 ஆகிய தேதிகளில் இந்தப் பணிகள் நடைபெற்றன.
அணுப்பிளவு சோதனை
மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இந்திய அணுமின் கழகம், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என 4 நிலைகளில் அனுமதியைப் பெற்று, ஞாயிற்றுக்கிழமை கிரிட்டிகாலிட்டி சோதனை நிகழ்த்தப்பட்டது. இதை கணினி திரையில் பார்த்த விஞ்ஞானிகள் குழுவினர், ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சோதனை வெற்றி
இந்திய அணுசக்தி கழக தலைவர் எஸ்.கே.சர்மா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று இங்கு முகாமிட்டு இந்த பணியை தீவிரமாக கண்காணித்து வந்தார்கள். நேற்று இரவு 8.56 மணிக்கு அணு பிளவு சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, அணு பிளவினால் வெப்பம் உருவாக்கப்பட்டு நீராவி மூலம் 2வது அணு உலை இயங்க தொடங்கியது. இதன்மூலம் அந்த அணுஉலையில் மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டது.
விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
இதில் மகிழ்ச்சி அடைந்த, இந்திய-ரஷ்ய விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்திய அணுசக்தி கழக தலைவர் சர்மாவும் தனது மகிழ்ச்சியை விஞ்ஞானிகளுடன் பகிர்ந்துகொண்டார். மேலும், மின் உற்பத்தி பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த அணுமின் கழகத் தலைவர் சர்மா, 3 மற்றும் 4 அணு உலைகளுக்கான கட்டுமானப்பணி அடுத்த நிதியாண்டில் தொடங்கும் என்றார்.
2வது அணு உலை
2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது என்றாலும், முதலில் மிகவும் குறைவான மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டு படிப்படியாக மின் உற்பத்தியை அதிகரிக்க விஞ்ஞானிகள் குழுவினர் ஆயத்தமாகி வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்தில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும், அதைத்தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி படிப்படியாக மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அணுமின் நிலைய நிர்வாகம் அறிவித்து உள்ளது.
562 மெகாவாட் மின்சாரம்
முதல் உலையில் இதுவரை 1,006 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் 2வது அணு உலை அடுத்த 6 மாதத்தில் முழுத்திறன் மின் உற்பத்தியை எட்டும். 1,000 மெகாவாட் திறனை எட்டும்பொழுது ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தமிழகத்துக்கு 562 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று கூடங்குளம் வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
28 ஆண்டு கால கனவு
கூடங்குளத்தில் அணு உலைகள் அமைப்பது தொடர்பாக 1988இல் இந்திய-ரஷிய கூட்டு முயற்சியில் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 2013இல் முதல் உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இப்போது, 2ஆவது உலையிலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டிருப்பதில் இந்திய அணு மின் கழகம் மற்றும் தமிழக மின்சாரத் தேவைக்கான 28 ஆண்டு கால கனவு 2016இல் நிறைவேறியுள்ளது.