கூடங்குளம் முதல் யூனிட் மின் உற்பத்தி- ஜனவரி முதல் துவங்கும் என அணுசக்தி ஆணையம் அறிவிப்பு
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது யூனிட்டில் அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என இந்திய அணுசக்தி ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அணுசக்தி ஆணைய தலைவர் சேகர் பாசு இதனை தெரிவித்துள்ளார். பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் காரணமாகவே முதல் அணுமின் உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அணுமின் நிலையத்தின் 2 ஆவது உலையில் வரும் ஏப்ரல் மாதம் மின் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சேகர் பாசு தெரிவித்தார். 2 ஆவது உலையில் மின் உற்பத்தி அடுத்த மாதம் துவங்காது எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், 3 ஆவது மற்றும் 4ஆவது அணு உலைகளை அமைக்கும் பணி நிறைவடைய இன்னும் 8 ஆண்டுகள் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.