கூடங்குளம் அணு உலையின் வெப்ப நீர் செல்லும் குழாயில் திடீர் பழுது- மின்உற்பத்தி மீண்டும் நிறுத்தம்!!
நெல்லை: கூடங்குளம் முதலாவது அணு உலையில் வெப்ப நீர் செல்லும் குழாயில் திடீர் பழுது ஏற்பட்டதால் நேற்று இரவு முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் கடந்த 2013- ம் ஆண்டு மின் உற்பத்தி துவங்கியது.
படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு ஜூன் 7-ந் தேதி 1000 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியது. ஆனால் கடந்த ஆண்டு ஜூன் 24-ந் தேதி ஜூன் மாதம் ஆய்வு பணிக்காக முதல் அணு உலை நிறுத்தப்பட்டது.
அப்போது மீண்டும் 2 மாதங்களில் மின் உற்பத்தியை துவங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் மின் உற்பத்தி தள்ளி போனது.
இதனிடையே அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தியை துவங்க அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் கடந்த 20-ந் தேதி அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து அணு உலையில் அணு பிளவு சோதனை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் அங்கு மின் உற்பத்தி துவங்கப்பட்டது. ஆனால் அன்று மாலையே திடீரென மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அன்று இரவு 11 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.
இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. இந்த மின் உற்பத்தி நேற்று மாலை 750 மெகா வாட்டை எட்டியது. தொடர்ந்து மின் உற்பத்தியை அணு மின் நிலைய வி்ஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் திடீரென நேற்று இரவு அணு உலையில் வெப்ப நீர் செல்லும் குழாயில் பழுது ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இயக்குநர் சுந்தர் விளக்கம்
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர், சிறிய அளவில் வெப்பநீர் செல்லும் குழாயில் பழுது ஏற்பட்டது. ஓரிரு நாட்களில் இது சரி செய்யப்பட்டு வரும் என்றார்.
கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி நாளை மறுநாள் (பிப்ரவரி 7-ந் தேதி) முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.