கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி முதன் முறையாக இன்று தொடங்கியுள்ளது.
கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2013ம் ஆண்டு அக்டோபார் 22ம் தேதி முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்த மின் உற்பத்தி 1000 மெகாவாட்டை அடைய 8 மாதங்கள் பிடித்தது.
இதனைத் தொடர்ந்து 2வது அணு உலைகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர், 2வது அணு உலையில் தொடர்ந்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு எரிபொருள் நிரப்பும் பணிகளும் நடந்தேறின. இந்நிலையில், கடந்த மே 18ம் தேதி கூடங்குளம் 2வது அணு உலையில் யுரேனியம் நிரம்பும் பணியும் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து ஜுலை 10ம் தேதி அணுப்பிளவு தொடர்வினை தொடங்கியது. சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடந்ததையடுத்து மின்உற்பத்தியை தொடங்குவதற்கு மத்திய அணு சக்தி ஒழுங்காற்று வாரியத்துக்கு கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து இன்று 2வது அணு உலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
கூடங்குளம் 2வது அணு உலையில் இன்னும் 10 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று கடந்த 15ம் தேதி அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 11.17 மணிக்கு கூடங்குளம் 2வது அணு உலையில் முதன் முறையாக மின் உற்பத்தி தொடங்கியது.
தற்போது 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு தென்னக மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி நடைபெறும் என்றும் அதன் பிறகு வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கும் என்றும் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.