கூடங்குளம் 2வது அணு உலையில் அணுப்பிளவு சோதனையுடன் மின் உற்பத்தி தொடக்கம்
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தின், 2வது அணு உலையில், ஜூலை 10ம் தேதி ஞாயிறு இரவு மின் உற்பத்தி துவங்கியது. இதிலிருந்து தமிழகத்திற்கு கூடுதலாக, 560 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து 2வது அணு உலையில் மின் உற்பத்தி செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு கடந்த 8ம் தேதி கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்க மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது.
அன்று இரவு 7.52 மணிக்கு 2வது அணு உலையில் அணு பிளவுக்கு முந்தைய சோதனைகள் தொடங்கின. இதற்கான 48 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று இரவு முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து 2வது அணு உலையில் கிரிட்டிகாலிட்டி எனப்படும் அணு பிளவு சோதனை இந்திய அணு சக்தி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.சர்மா, கூடங்குளம் அணு மின்நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் முன்னிலையில் இரவு 8.56 மணிக்கு நடந்தது. பின்னர் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. படிப்படியாக மின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட பின்னர் அந்த மின்சாரம் மத்திய மின் தொகுப்பு மையத்திற்கு அனுப்பப்படும்.
கூடங்குளம் அணு உலையில் எரி பொருளாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. இதில் போரான் அமிலத்தின் தன்மையை குறைக்க தண்ணீர் ஊற்றப்படும். இதன் மூலம் ஒரு லிட்டரில் 17.4 கிராம் அளவுள்ள போரான் படிப்படியாக 7.4 கிராமாக குறையும். இவ்வாறு குறையும்போது நியூட்ரான் துகள்கள் செயல்பட்டு யுரேனியத்தை பிளக்க துவங்கும். இதுவே அணு பிளவு சோதனை எனப்படுகிறது.
ஒரு நியூட்ரான் ஒரு யுரேனியத்தை பிளந்தால் அதிலிருந்து 2 நியூட்ரான்கள் வெளிப்படும். இவ்வாறாக அணு பிளவு அதிகரிக்க, அதிகரிக்க வெப்பம் உருவாகும். அந்த வெப்பம் நீராவியின் மூலம் மின் உற்பத்திக்காக அமைக்கப்பட்டுள்ள டர்பன்களை சுழலச் செய்கிறது. இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த வகையில் நேற்று இரவு, 8.56 மணிக்கு, மின் உற்பத்தி துவங்கியது. மின் உற்பத்தியின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். ஒவ்வொரு நிலையிலும் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெற்றே மின் உற்பத்தியின் அளவு அதிகரிக்கப்படும்.எனவே, முழு அளவான, 1,000 மெகாவாட் உற்பத்தியை எட்டுவதற்கு, ஓரிரு மாதங்கள் ஆகலாம்.
முதலாவது அணு உலையில், 2013 ஜூலை, 13ம் தேதி 'கிரிட்டிகாலிட்டி' என்ற, அணுப்பிளவு துவங்கியது. அதே ஆண்டு அக்டோபர், 22ம் தேதி முதல் மின் உற்பத்தியை, தென்னக மின் தொகுப்பிற்கு அனுப்பினர்.
2014 டிசம்பர், 31ல், வணிக ரீதியிலான மின் உற்பத்தி துவங்கியது. அவ்வப்போது ஏற்பட்ட சிறுசிறு பழுதுகள் சரி செய்யப்பட்டு, தற்போது முழுஅளவில், 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கூடங்குளம் முதல் அணு உலையில், 1,000 மெகாவாட் உற்பத்தி செய்த போது, தமிழகத்திற்கு உரிய பங்காக, 462.5 மெகாவாட், புதுச்சேரிக்கு, 33.5 மெகாவாட், கேரளாவுக்கு, 133 மெகாவாட், கர்நாடகாவிற்கு, 221 மெகாவாட், ஒதுக்கீடு செய்யப்படாத மின்சாரம், 150 மெகாவாட் என இருந்தது.
ஒதுக்கீடு செய்யப்படாத உபரி மின்சாரத்தில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக, 100 மெகாவாட் சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்திற்கு அதிகபட்சமாக, 562.5 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது.
தற்போது, 2வது அணு உலையிலும் இதே அளவு, 562.5 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மேலும், 2வது அணு உலையில் இருக்கும் உபரி மின்சாரம், 50 மெகாவாட், ஆந்திராவுக்கு அனுப்பப்பட உள்ளது.