கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி தாமதம்.. நெல்லை மாவட்டத்தில் மீண்டும் மின்வெட்டு
நெல்லை: கூடன்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்க காலதாமதம் ஆகும் என வளாக இயக்குனர் (site director) ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது கூறியதாவது: கூடங்குளம் அணு மின் நிலையத்தி்ல் முதலாவது அணு உலையில் பராமரிப்பு பணிகளுக்காக சுமார் 90 நாட்கள் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கு பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. செப்டம்பர் இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் பராமரிப்பு பணி என்பதால் பணிகளை முடிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே செப்டம்பர் இறுதிக்குள் மீண்டும் மின் உற்பத்தியை தொடங்க வாய்பி்ல்லை.
அக்டோபரில் மின் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது அணு உலையில் டம்மி எரிபொருள் அகற்றும் பணி முடிவடைந்துள்ளது. இரண்டு மாதத்தி்ற்குள் இங்கு எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கும். 3வது மற்றும் 4வது அணு உலைகள் தொடங்குதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ரஷ்ய குழுவினர் சமீபத்தில் வழக்கமான ஆய்வுகளை மு\டித்து விட்டு சென்றுள்ளனர்.
கூடங்குளம் அணு மின் திட்டம் மருத்துவ பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதுவரை ரூ.12.5 கோடி மதிப்பிலான மருத்துவ திட்டங்கள் நிறைவறைந்துளளன. இப்பணி தொடரும். குறிப்பாக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கேத் லேப் இருதய நோயாளிகளுக்கு தேவையான நவீன சிகிச்சை வசதிகள் செய்து கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மீண்டும் மின்வெட்டு பிரச்சனை தலை தூக்கியுள்ளது. நேற்று காலை 7.30 மணிக்கு போன மின்சாரம் பின்னர் அரை மணி நேரம் கழித்தே வந்தது. இது போல் மாலை 6.30 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் இரவு 8 மணிக்குதான் மீண்டும் வந்தது. இன்று காலையும் 7.30 மணி அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.