கூடங்குளம் போராட்ட குழு உடைந்ததா?.. முகிலன் தலைமையில் புதுக் குழு பிரிந்ததா ?.. உதயகுமார் விளக்கம்
நெல்லை: அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம் தொடர்ந்து போராட்டக் களத்தில் இருக்கும் எனறு கூறியுள்ள உதயகுமார், நான் இல்லையென்றாலும் மக்கள் தொடர்ந்து போராடுவார்கள் என்று கூறியுள்ளார். பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகிலன் சந்திக்க மறுத்தது குறித்து கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் விளக்கம் அளித்துள்ளார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடிந்தகரையில் போராட்டம் துவங்கியது. இந்த போராட்டத்தால் அணு உலை பணிகள் சுமார் 6 மாதம் நிறுத்தப்பட்டது. இடிந்தகரை லூர்து மாதா ஆலய வாளகத்தில் நடந்த இந்த போராட்டத்தில் உதயகுமார், புஷ்பராயன், பாதிரியார் ஜேசுராஜ் ஆகியோர் முன்னின்று நடத்தினர். பின்னர் முகிலனும் இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டார்.
போராட்டத்தின் உச்சக்கட்டமாக போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர், கண்ணீர்புகை குண்டும் வீசியது. 2014ம் ஆண்டு ஜனவரி சுமார் 900 நாட்களையும்கடந்து போராட்டம் நடந்தது. இதனால் போராட்டக்காரர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் போராட்டாக்குழுவை சேர்ந்த யாரும் வெளியே வரமுடியவில்லை.
இந்த நிலையில் கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக முக்கிய தலைவர்கள் இடிந்தகரையை விட்டு வெளியேறினர். சுப. உதயகுமார் கன்னியாகுமரியிலும், புஷ்பராயன் தூத்துக்குடி தொகுதியிலும் ஜேசுராஜ் நெல்லை தொகுதியிலும் போட்டியிட்டனர். ஆனால் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை இதனால் டெபாசிட் கூட யாருக்கும் கிடைக்கவில்லை.
இதன் பின்னர் போராட்ட குழுவை சேர்ந்த புஷ்பராயன் தனது தொண்டு நிறுவன பணிகளை கவனித்து வருகிறார். ஜேசுராஜ் மீ்ண்டும் பாதிரியார் பணிக்கு சென்று விட்டார். சுப. உதயகுமார், முகிலன் மட்டுமே தொடர்ந்து அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர்.
சிறையில் முகிலன்
இந்த நிலையில் முகிலன் போராட்ட குழுவிலிருந்து விலகி கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு என்ற தனி அமைப்பை தொடங்கியுள்ளார். கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த ஈரோடு முகிலன், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த முகிலனை அண்மையில் கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் உள்ளிட்டோர் சந்திக்க சென்றனர். அப்போது முகிலன், உதயகுமாரனை சந்திக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியானது.
மீண்டும் உண்ணாவிரதம்
பச்சை தமிழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள சுப. உதயகுமார், நெல்லையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், கெய்ல் எரிவாயு குழாய் திட்டத்திற்காக கேரளாவில் சாலை ஓரங்களில் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் விளைநிலங்களில் பதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடப் போகிறேன் என்றார்.
தரமற்ற பொருட்கள்
கூடங்குளத்தில் தரமற்ற பொருட்களைக் கொண்டு அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று ஒரு மாதத்திற்குள் அறிவிக்க வேண்டும் இல்லை எனில் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் சுப. உதயகுமார் கூறியுள்ளார்.
முகிலனுடன் கருத்து வேறுபாடு
அணு உலைக்கு எதிரான போராட்டக்குழுவும் பச்சை தமிழகம் இயக்கமும் ஒன்றுதான் என்றும் கூறியுள்ள சுப. உதயகுமார். முகிலன் உடனான கருத்து வேறுபாடு பற்றி பகிரங்கமாக அறிவித்துள்ளார். கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தில் நானும், மை.பா. ஜேசுராஜ், புஷ்பராயன் ஈடுபட்டிருந்தோம். இப்போராட்டத்தில் முகிலனும் தன்னை இணைத்துக் கொண்டார். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு புஷ்பராயன், தனிப்பட்ட கருத்துக் காரணமாக இந்த இயக்கத்தில் இருந்து விலகியுள்ளார்.
தனியாக இயங்கிய முகிலன்
ஆனால் முகிலன் எங்களுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல், ஊர் கமிட்டியினரை தனியாக சென்று சந்தித்து பேசினார். இந்நிலையில் போராட்டக்குழு குறித்து வெளியாகும் தவறான கருத்துக்கள் குறித்து அவரிடம் தெரிவித்தேன். இதனை முகிலனும் ஏற்றுக் கொண்டார்.
சந்திக்க மறுத்த முகிலன்
இந்த சூழலில் மத்திய சிறைக்கு சென்ற எங்களை முகிலன் சந்திக்க மறுத்துவிட்டார். மக்களுக்கான போராட்டத்தில் ஈடுபடும் போராளிகள், அரசியல்வாதிகளைபோல் செயல்படுவது சரியானதல்ல. என்ன காரணத்திற்காக சந்திக்க மறுத்தார் என தெரியவில்லை. அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம் தொடர்ந்து போராட்டக் களத்தில் இருக்கும். உதயகுமார் இல்லையென்றாலும் மக்கள் தொடர்ந்து போராடுவார்கள் என்றார் அவர்.
சட்டசபைத் தேர்தலில் போட்டி
நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் பச்சைத் தமிழகம் கட்சி சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் போட்டியிடப்போவதாக கூறியுள்ளார். மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும் சுப. உதயகுமார் ஏற்கனவே அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.