மின்சார உற்பத்திக்கு தயாராகும் கூடங்குளம் 2-வது அணு உலை!
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலை மின்சார உற்பத்திக்கு தயாராகி வருகிறது. இந்த அணு உலையில் அடுத்த வாரத்துக்குள் மின் உற்பத்திக்கான அணு பிளவு சோதனை நடத்தப்பட உள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அணு உலை கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி மின்சாரத்தை உற்பத்தி செய்ய தொடங்கியது.
முதன் முதலாக 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அபிஷேகப்பட்டியில் உள்ள மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது. எனினும் பராமரிப்பு பணிக்காக அணு மின் உலை அவ்வப்போது நிறுத்தப்பட்டு பின்னர் இயக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 22-ந் தேதி முதல் அணு உலை தொடர்ந்து இயங்கி வருகிறது. முதல் அணு உலை தொடர்ந்து இயங்கி வருவதை அடுத்து 2-வது அணு உலையிலும் மின்சார உற்பத்தியை தொடங்க கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி கடந்த மாதம் 18-ந் தேதி நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து உயர் வெப்ப அழுத்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை முடிவுகளை தொடர்ந்து கடந்த 10-ந் தேதி பாதுகாப்பு வால்வுகளை திறந்து நீராவியை வெளியேற்றும் சோதனை நடந்தது.
இந்த சோதனை 21-ந் தேதி காலை நிறைவடைந்தது. இதையடுத்து 2-வது அணு உலையில் அணு பிளவு சோதனை நடத்துவதற்காக இறுதி கட்ட பணியில் இந்திய-ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை வாரியத்தின் அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அனுமதி கிடைத்தவுடன் 2-வது அணு உலையில் மின் உற்பத்திக்காக அணு பிளவு ஏற்படுத்தப்படும். இந்த மாத இறுதிக்குள் அணு பிளவு சோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.