52 வயது ஆசிரியை துணிச்சல் போராட்டம்.. திருடன் கன்னத்தைக் கடித்துத் துப்பினார்.. நகைகள் தப்பின!
நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கத்தியை வைத்து காதை அறுத்து நகையைப் பறிக்க முயன்ற திருடனுடன் கடுமைாக போராடிய தலைமை ஆசிரியை, அந்த திருடனின் கன்னத்தைக் கடித்துத் துப்பினார். இதனால் அலறித் துடித்த திருடன் அப்படியும் விடாமல் திருட முயன்றான். ஆனால் ஆசிரியை போட்ட கூச்சலில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் திருடன் தப்பி விட்டான்.
கூடங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த துணிகரத் திருட்டுச் சம்பவம்.
அந்த தலைமை ஆசிரியையின் பெயர் ஜோசபின் இமாகுலேட். 52 வயதான அவர் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று மதியம் வீட்டுக்குச் சாப்பிட வந்தார். வீட்டில் அவர் மட்டும்தான் இருந்தார். அப்போது திடீரென ஒரு மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்தார். இமாகுலேட் கழுத்தில் கத்தியை வைத்து நகைகளைக் கழட்டுமாறு மிரட்டியுள்ளார்.
ஆனால் தலைமை ஆசிரியை பயப்படாமல் கத்தியை தட்டி விட்டார். திருடனிடமிருந்து தப்பவும் முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த திருடன் இமாகுலேட் கழுத்தில் கிடந்த 10 பவுன் சங்கிலையப் பறிக்க முயன்றான். ஆனால் இமாகுலேட் விடவில்லை. கையில் இறுக்கமாக பிடித்துக் கொண்டார். பின்னர் திருடனின் கன்னத்தில் பலமாக கடித்துள்ளார். இதில் கன்னத்தில் பாதி சதை வெளியே வந்து விட்டது. இதனம் ரத்தம் கொட்டி அலறித் துடித்துள்ளான் திருடன்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட அவன் காதை அறுத்து கம்மலை கழட்ட முயன்றான். அதையும் விடாமல் போராடினார் இமாகுலேட். இந்த நிலையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே திருடன் தப்பி விட்டான்.
போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து இமாகுலேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். திருடனைப் பிடிக்க தற்போது வலை வீசப்பட்டுள்ளது. அவன் விட்டுச் சென்ற செல்போனை வைத்து அவனை எளிதாக பிடித்து விடலாம் என போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தலைமை ஆசிரியையின் துணிச்சலான போராட்டத்தால் அவரது நகைகள் அத்தனையும் தப்பின.