திமிங்கலங்கள் மரணம்- இரவு முழுவதும் பறந்த விமானங்கள்... என்னமோ நடக்குது மர்மமா இருக்குது: உதயகுமார்
திருநெல்வேலி: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களின் கடற்கரைப் பகுதிகளில் திமிங்கலங்கள் மர்ம மரணம் அடைந்துள்ளதற்கு கூடங்குளம் அணு உலையில் நடக்கும் பரிசோதனைகள் காரணமோ என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உதயகுமார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இடிந்தகரை முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை எங்கும் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன, அல்லது இறந்து கிடக்கின்றன.
கூடங்குளம் அணுஉலைப் பகுதியில் ஏராளமான காவல் துறையினர், துணை இராணுவத்தினர் குவிக்கப்படுகின்றனர். நேற்று (சனவரி 11) இரவு முழுவதும் கூடங்குளம் பகுதியில் சிறியரக விமானங்கள் பறந்த வண்ணமிருந்தன.
அணுஉலையில் சில பரிசோதனைகள் நடப்பதாக நேற்று செய்திகள் வந்தன. அங்கே என்னவோ குழப்பம் நடக்கிறது.
ஆனால் அதிகாரவர்க்கம் வழக்கம்போல அமைதிகாக்கிறது, அல்லது மூடிமறைக்க முனைகிறது.
பேய்க்கு வாழ்க்கைப்பட்டோரே, பிணம் தின்ன பழகிக் கொள்ளுங்கள். இதுதான் நமக்கு வாழ்க்கை இனிமேல்!
கூடங்குளம் அணுஉலைத் தலைவர் சுந்தர் அய்யா அவர்களே, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமே, தமிழ் நாட்டின் மாநில அரசே, இந்திய ஒன்றிய அரசே எப்போது பேசுவீர்கள்? நாங்களும் செத்த பிறகா?
இவ்வாறு உதயகுமார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வதந்திகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல
இதேபோல் மற்றொரு பதிவில் உதயகுமார் கூறியுள்ளதாவது:
திமிங்கலங்கள் செத்து கரை ஒதுங்குவதை நாம் நமது போராட்டத்துக்கு பயன்படுத்துவதாக ஒரு நண்பர் குறை சொல்கிறார்.
- கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய அனைத்து அறிக்கைகளையும் மக்களுக்குக் கொடுங்கள்.
- ஒன்றிய தகவல் ஆணையம் இந்த அறிக்கைகளை மக்களுக்குக் கொடுங்கள் என்று பணித்த பிறகும், இந்திய அணுமின் கழகம் தில்லி உயர்நீதி மன்றம் சென்று தடையாணை வாங்கியிருப்பதை ரத்து செய்யுங்கள்.
- நெல்லை, குமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் அனைவருக்கும் பேரிடர் பயிற்சி கொடுங்கள்.
- பாதுகாப்பு தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மக்களுக்கு முன்கூட்டியே தெரிவியுங்கள்.
- நீங்கள் கொண்டுவரும் அழிவுத் திட்டங்கள் பற்றிய முழு உண்மைகளை மக்களுக்குத் தெரிவியுங்கள். உண்மை பேசுங்கள்.
- மக்களை மதித்து செயல்படுங்கள். பிரதமர், முதல்வர், உயர் அதிகாரிகள் போன்றோர் மக்களிடம் உண்மையாக, நேர்மையாக பேசவேண்டும் என்கிற உண்மையை உணருங்கள். இவர்கள் எல்லாம் தேவதூதர்கள், மக்கள் எல்லாம் அடிமைகள் என்கிற நிலையை மாற்றுங்கள். இதில் எதையும் செய்யாமலிருந்தால், வதந்திகளும், பீதிகளும் பரவத்தான் செய்யும். மக்கள் பொறுப்பல்ல.