கூடங்குளம் முதல் அணு உலையில் 69 கோடி யூனிட் மின் உற்பத்தி
விருதுநகர்: கூடங்குளம் முதல் அணு உலையில் இதுவரை 69 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அக்டோபரில் 2வது அணு உலை இயங்க துவங்கும் என வாளக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் அணுசக்தி விழிப்புணர்வு' பேரணி நடந்தது. கூடங்குளம் அணு மின் நிலையம், விருதுநகரை சேர்ந்த ஒரு தனியார் கல்லூரியுடன் சேர்ந்து நடத்திய இப்பேரணியை கூடங்குளம் அணு மின் நிலைய வாளக இயக்குனர் சுந்தர் துவங்கி வைத்தார்.
பேரணியைத் துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: அணுசக்தியால், எந்த ஆபத்தும் கிடையாது. இதுகுறித்த விளங்கங்களை, பொதுமக்களுக்கு, மாணவர்கள் எடுத்து கூற வேண்டும்.
கூடங்குளத்தில் முதல் அணு உலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 69 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் முதல் யூனிட்டில் 75 சதவீத மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்படி நாள்தோறும் 680 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அணுசக்தி கட்டுப்பாட்டு குழு அனுமதியை தொடர்ந்து இது 100 சதவீதமாக உயர்த்தப்படும். இன்னும் ஒரு மாதத்தில் கூடங்குளத்தில் 100 சதவீதம் உற்பத்தி செய்யப்படும். 2வது அணு உலை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அக்டோபரில் மின் உற்பத்தி துவங்கும்.
இந்தியாவில், கூடங்குளம் உட்பட ஏழு இடங்களில், அணு உலைகள் உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டும்போதே, பாதுகாப்பிற்காக, 40 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படாத வகையில், கடல் மட்டத்திலிருந்து, 25 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
இது, மூன்றாம் தலைமுறை பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளதால், இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும், அணு உலை, மூன்று நொடியில் தானாக நின்று விடும். இந்த அணு உலையை, இதுவரை, 1.50 லட்சம் பேர் பார்வையிட்டு சென்றுள்ளனர் என்று சுந்தர் கூறினார்.