கூடங்குளத்தில் இம்மாத இறுதியில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும்: இயக்குநர் சுந்தர்
நெல்லை: கூடங்குளம் முதலாவது அணு உலையில் இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும் என்று அதன் வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
நெல்லை அண்ணா பல்கலைக்கழகம், கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் தொழில்நுட்ப கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நெல்லை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் ஆற்றிய சிறப்புரை:
வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் மின்சார தேவை அதிகமாக உள்ளது. உற்பத்திக்கும், தேவைக்கும் உள்ள இடைவெளியை போக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு பல வகைகளில் எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் கூடங்குளம் மிக முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியுளளது.
குஜராத் மாநிலத்தில் புதிய மின் உற்பத்தி திட்டம் தொடங்கப்படுகிறது. கூடங்குளம் 3 மற்றும் 4வது அணு உலைகளை செயல்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
கூடங்குளம் முதலாவது அணு உலையில் எரிபொருள் மாற்றும் பணி இம்மாத இறுதிக்குள் நிறைவடையும்; அதனைத் தொடர்ந்து மின் உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2வது அணு உலையில் 35 மாதிரி எரிபொருள்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை வாரியத்தின் அனுமதி கிடைத்ததும் இந்த ஆண்டு இறுதியில் அங்கு மின் உற்பத்தி செய்யப்படும்.
3 மற்றும் 4 வது அணு உலைக்காக கான்கிரீட் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு தொடங்கும். முதல் அணு உலையில் அகற்றும் அணு கழிவுகள் அணு மின் நிலைய வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சுந்தர் கூறினார்.