குலசேகரன்பட்டினம் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. மைசூருக்கு அடித்த படியாக குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா
திருவிழாவினை காண லட்சக்கணக்கான மக்கள் வருவர். இங்கு நவராத்திரி விழாவே தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
தசரா திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு காளிபூஜை, இரவு 9 மணிக்கு சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. காலை கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலா வந்தது தொடர்ந்து காலை 8 மணிக்கு கோவிலின் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கொடிமரத்துக்குசிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். மாலையில் சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். தினமும் மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழாவி்ன் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 14ம் தேதி நடைபெறுகிறது. தசரா கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து நல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு வேடம் அணிந்த பக்தர்கள் தங்களது ஊர் பெயரில் தசராகுழுக்கள் அமைத்து நையாண்டி மேளம், கரகம், காவடி, குறவன், குறத்தி, கிராமிய கலைகள், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை பல்வேறு ஊர்களில் நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை பெற்று கடைசி நாளில் இங்குவந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம்.
இதனால் தூத்துக்குடி, நெல்லை,குமரி மாவட்டங்கள் முழுவதும் தசரா திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சாமி வேடம் அணிந்த பக்தர்களை காணமுடிகிறது.