குலசையில் 10 லட்சம் பக்தர்கள்.. ஓம் காளி, ஜெய் காளி கோஷம் முழங்க, மகிஷனை வதம் செய்த முத்தாரம்மன்
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் முக்கிய அம்சமாக, பத்தாம் திருவிழா நாளான வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு மகிஷாசுரச சம்ஹாரம் நடைபெற்றது. இந்த விழாவில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவிலேயே மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினத்தில் தசரா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா, அக்டோபர் 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது.
பிரமாண்ட கொண்டாட்டம்
[குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா, தனித்துவ சிறப்பானது ஏன் தெரியுமா?]
இதையடுத்து, காப்பு அணிந்த பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனுக்கு காணிக்கை சேகரித்தனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தசரா குழுவினர் (தசரா செட்டுகள்) பல்வேறு கலைநிகழ்ச்சிகளை வீதிதோறும் நடத்தி, அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர். நவராத்திரி நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாக்கோலம் பூண்ட குலசை நகரம்
கோயில் கலையரங்கில் பரத நாட்டியம், பக்தி இன்னிசை, சமயச் சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பல்வேறு தசரா குழுக்கள், அமைப்புகள் சார்பில் சிறப்பு அன்னதான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விஜயதசமியான நேற்று, விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று அதாவது வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இதையொட்டி, காலை முதலே பக்தர்கள் குலசேகரபட்டினத்தில் குவிந்தனர்.
கடற்கரையில் எழுந்தருளிய அம்மன்
இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. நள்ளிரவு சரியாக, 12 மணிக்கு அம்மன் கடற்கரையில் எழுந்தருளினார். அப்போது மகிஷாசூரன், பல்வேறு ரூபங்களை எடுத்து அம்பிகைக்கு எதிராக போர் வியூகம் வகுத்தான். ஆனால் முக்காலமும் உணர்ந்த, மூன்று முகம் கொண்ட முத்தாரம்மன், முன்பாக, அசுரனின் தந்திரங்கள் எடுபடவில்லை. அவன் எடுத்து வந்த ஒவ்வொரு ரூபத்தையும் அம்பிகையின் திரிசூலம் அழித்து, வெற்றி கொடி நாட்டியது.
தீமை அழிக்கப்பட்டது
மகிஷாசூரன், சிம்மத் தலை, எருமைத் தலை என பல வடிவங்களில் வந்தபோதும், அம்பிகையின் திரிசூலம் அவற்றை கொய்து எறிந்து வதம் செய்தது. தீமையை அழித்து, நன்மையை அம்பிகை நிலைநாட்டினாள். இதைப் பார்த்த திரளாக கூடியிருந்த சுமார் 10 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில், "ஓம் காளி.. ஜெய் காளி.." என ஆங்கார கோஷமிட்டனர். பக்தர்கள் அருள் வந்து ஆடினர். குறிப்பாக காளிவேசம் பூண்டு, கடற்கரை வந்திருந்த பக்தர்கள் கடும் ஆங்காரமாக ஆடினர். பக்தர்களின் மகிழ்ச்சியை உணர்த்தும் வகையில், வான வேடிக்கைகள் முழங்கப்பட்டன. பல வகை மேளங்களும், வாத்தியங்களும் வாசிக்கப்பட்டன. மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்ததும், அம்பிகையை சாந்தப்படுத்த, அவளுக்கு பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, போர்க்கோல கோபம் நீங்கிய அம்பிகை, தாய்க்கோலம் கொண்டு, பக்தர்களை கருணை கண்கொண்டு பார்த்தாள்.
அம்மன் வீதியுலா
இதையடுத்து, கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் கோயில், கோயில் கலையரங்கம் ஆகியவற்றில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சனிக்கிழமையான இன்று காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்பட்டு முக்கிய வீதிகளில் பவனி வருகிறார். மாலை 4 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்படும். பக்தர்கள் காப்பு அவிழ்த்து தங்கள் வேடங்களை களைந்து விரதத்தை நிறைவு செய்வர். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.