தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தமிழிலேயே உரையாற்ற வேண்டும்... குமரிஆனந்தன் வலியுறுத்தல்
தமிழை பயிற்றுமொழியாக ஆக்க வலியுறுத்தியும், நாடாளுமன்றத்துக்கு செல்லும் தமிழக எம்.பி.க்கள் தமிழில் தான் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், காந்தி பேரவை, இலக்கிய பேரவை தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் குமரிஆனந்தன் பேசியதாவது:-
காமராஜர் போன்ற மாபெரும் தலைவர்கள் தமிழ்மொழி வளர்ச்சியில் மிகுந்த பங்காற்றியுள்ளனர். பாரதி போன்ற பார் போற்றும் புலவர்கள் தமிழ் மொழிக்காக பாடுபட்டதை உலகம் என்றும் மறக்காது. ஆனால், தற்போதுள்ள நிலையில் கல்வி நிறுவனங்களில் கூட தமிழை சொல்லிக்கொடுக்க மறுக்கிறார்கள். கேரளா போன்ற மாநிலங்களில் தங்களது தாய்மொழியிலேயே கல்வி கற்க வேண்டும் என்று நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் பாடம் நடத்துவதில் கல்வி நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.
எனவே தமிழ்நாட்டில், தமிழ் மொழியை கட்டாய பயிற்றுமொழியாக ஆக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் கூட ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தான் எம்.பி.க்கள் பேசுகிறார்களே தவிர தமிழில் யாரும் பேசுவது கிடையாது. எனவே, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வான எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் தமிழிலேயே உரையாற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டு இருக்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.