சென்னை டூ குமரி மதுவிலக்கு பாதயாத்திரை: குமரி அனந்தனை வாழ்த்தத் திரண்ட தலைவர்கள்
சென்னை: பூரண மதுவிலக்குக்காக இறுதி மூச்சுவரை போராடுவேன் என்றும் பூரண மதுவிலக்கு வந்தே தீரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் குமரி அனந்தன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை வலியுறுத்தி அகில இந்திய மது விலக்கு பேரவை சார்பில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை குமரிஅனந்தன் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதன் தொடக்க விழா பாரிமுனை ராஜாஜி சிலை அருகே இன்று தொடங்கியது. ராஜாஜி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு குமரிஅனந்தன் நடைபயணத்தை தொடங்கினார்.
மது விலக்கை வலியுறுத்தும் அனைத்துக்கட்சி தலைவர்களும் கொடியை எடுத்து கொடுத்து நடைபயணத்தை தொடங்கி வைக்கும்படி குமரிஅனந்தன் அழைத்து இருந்தார். இதையடுத்து காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, த.மா.கா., சமத்துவ மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
திமுகவைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின், பொன்முடி , காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, வசந்தகுமார் , மக்கள் நல கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், நல்லக்கண்ணு, ரங்கராஜன் எம்.பி., த.மா.கா. தலைவர்கள் ஞானதேசிகன், கோவை தங்கம், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் பழ.நெடுமாறன், தமிழருவி மணியன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்ட தலைவர்கள் குமரிஅனந்தனை வாழ்த்து வழி அனுப்பி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய குமரிஅனந்தன், பூரண மதுவிலக்குக்காக இறுதி மூச்சுவரை போராடுவேன். பூரண மதுவிலக்கு வந்தே தீரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
வாழ்த்தி பேசிய மு.க.ஸ்டாலின் , இந்த வயதிலும் மது விலக்குக்காக நடைபயணம் செல்லும் குமரி அனந்தனை நினைத்து சந்தோஷப்படுகிறோம். வாழ்த்துகிறோம். தி.மு.க. தலைவர் கலைஞர் சார்பில் வாழ்த்து தெரிக்கிறேன் என்றார்.
வழியனுப்பி பேசிய வைகோ, நமது இலக்கு மது விலக்கு. அதனை அடைந்தே தீருவோம். இயேசு பிரான் பிறந்த நாளில் இந்த பிரசாரத்தை தொடங்கி இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். மதுவுக்கு காரணமான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வருகிற தேர்தலில் தோல்வியை சந்திப்பது உறுதி. மீண்டும் மது விலக்கு வந்தே தீரும் என்றார்.
சரத்குமார் கூறும்போது, குமரிஅனந்தனின் நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். பூரண மது விலக்கை உடனடியாக அமல்படுத்துவது சாதாரண விஷயமாக தெரியவில்லை. அதிக வருவாய் கிடைக்கின்ற துறை. எனவே இந்த பிரச்சினையில் முதல்வர் தனிக்கவனம் செலுத்தி நிச்சயமாக பொதுவான நல்ல தீர்வு காண்பார் என்று தெரிவித்தார்.
இன்று டிசம்பர் 25ம் தேதி தொடங்கியுள்ள குமரிஅனந்தனின் நடைபயணம் வருகிற பிப்ரவரி மாதம் 12ம்தேதி கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் நிறைவடைகிறது.