மது விழிப்புணர்வுக்காக... 120 கி.மீ… 11 நாட்கள் நடைபயணம்… குமரி அனந்தனுக்கு உற்சாக வரவேற்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துக்களிலும் மது விலக்கை அமல்படுத்தி தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தள்ளாத வயதிலும் தளராமல் 11 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு சென்னை திரும்பிய அவருக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மதுரையில் இருந்து எட்டயபுரம் வரை காங்கிரஸ் குமரி அனந்தன் 11 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார்.
கடந்த 19 ஆம் தேதி மதுரை மேலமாசிவீதியில் உள்ள காதிபவன் அருகில் இருந்து தொடங்கிய குமரிஅனந்தனின் நடைபயணத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.இளங்கோவன் தொடங்கி வைத்தார்.
எட்டயபுரத்தில் நிறைவு
11 நாட்கள் நடைபயணத்திற்குப் பின்னர் 30 ஆம் தேதி எட்டையபுரத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்தார். 120 கிலோமீட்டர் தூரம் நடைபயணத்திற்குப் பின்னர் அவர், சுதந்திர போராட்ட வீரர் பாரதியின் இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
மதுவினால் விபத்து
தமிழகத்தில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் மதுவால் தான் ஏற்படுகிறது என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். வரும் 2016ல் மதுவிலக்கிற்கு ஆதரவு கட்சியுடன் மட்டுமே கூட்டணி வைப்பதாக குமரி ஆனந்தன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பு
தமிழக காங்கிரஸ் துணை தலைவர் வசந்தகுமார், முன்னால் எம்எல்ஏ வேல் துரை, கவிஞர் சிதம்பரம் பாரதி, காங்கிரஸ் வர்த்தகர்கள் பிரிவு தலைவர் ராஜா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டேவிட்பிரபாகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எழும்பூரில் வரவேற்பு
இதனிடையே 120 கிலோமீட்டர் தூரத்தை 11 நாட்கள் நடைபயணமாக சென்று மதுவிலக்கு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட குமரி அனந்தன் சென்னை திரும்பினார். அவருக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.