சண்டை போட்ட மூவேந்தர்கள் காலம் போல மாறிவிட்டதே தமிழக காங்.... குமரிஅனந்தன் வேதனை
தஞ்சாவூர்: சங்க காலத்தில் சண்டை போட்டுக் கொண்டிருந்த மூவேந்தர்கள் காலம் போன்ற நிலைக்கு தமிழக காங்கிரஸ் மாறிவிட்டதே என்று அக்கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்து மாதங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் புதிய தலைவரை நியமிக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் தத்தளித்து வருகிறது.
தொண்டர்கள் அதிருப்தி
இதுவரை தற்காலிக தலைவர் கூட நியமிக்கப்படவில்லை. காங்கிரஸ் மேலிடத்தின் இந்த நடவடிக்கை அக்கட்சி தொண்டர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
சோனியா நலம்
இந்த நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவாக இருந்தார். தற்போது உடல்நலம் பெற்று வந்துள்ளார்.
விரைவில் புதிய தலைவர்
எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு விரைவில் தலைவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. பண்டைய காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஒற்றுமையாக இருந்தனர்.
மூவேந்தர்கள் சண்டை போல...
காலப்போக்கில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். அதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் மாறிவிட்டது. தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதே எங்களது கொள்கை. அதை தமிழக அரசு செயல்படுத்தவேண்டும்.
இவ்வாறு குமரி அனந்தன் கூறினார்.