கன்னிப்பூ நெல் சாகுபடி: குமரி மாவட்டத்தில் 4 அணைகள் நாளை திறப்பு
கன்னியாகுமரி: கன்னிப்பூ நெல் சாகுபடிக்காக குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1 சிற்றாறு 2 ஆகிய நான்கு அணைகளை நாளை திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளளார். கோதையாறு, பட்டணங்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவதாகவும், இதனால் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் எனவும் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட நெல் விவசாயத்தின் மிக முக்கிய நீராதாரமாக விளங்குவது பேச்சிப்பாறை அணை. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணை நூற்றாண்டை கடந்த பின்னும் வலுவோடு உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 48 அடி ஆகும்.
வழக்கமாக தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காலங்களில் இந்த அணை நிரம்பி வழியும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சில தினங்களாக பெய்து வருவதால் அணை மளமளவென நிரம்பி வருகிறது.
இந்த அணை நீரை நம்பித்தான் குமரி மாவட்ட நெல் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடியையும், கும்பப்பூ சாகுபடியையும் செய்கிறார்கள். அதன்படி கன்னிப்பூ சாகுபடி ஜூன் மாதம் நடைபெறும். அதற்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
பேச்சிப்பாறை அணையில் இருந்து கன்னிப்பூ சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒருவார காலம் தாமதமாக தொடங்கியுள்ளதால் நாளை ஜூன் 11ம் தேதி முதல் பாசனத்திற்காக அணையை திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2 அணைகளில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கோதையாறு, பட்டணங்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவதாகவும், இதனால் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் எனவும் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.