குமரியில் தொடரும் கடல் சீற்றம்.. 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கன்னியாகுமரியில் இன்றும் கடல் சீற்றத்துடனேயே காணப்படுகிறது
Recommended Video
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இன்றும் கடல் சீற்றத்துடனேயே காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் இன்றும் 2-வது நாளாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், எனவே, வரும் 30-ம் தேதி வரை குமரிக் கடல், மாலத்தீவு பகுதி, கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதற்கேற்றார்போல், ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா பகுதியில் நேற்று சூறைக்காற்றும், மணல் புயலும் கடுமையாக வீசியது. தனுஷ்கோடி அரிச்சல்முனை, முகுந்த ராயர்சத்திரம் பகுதிகளில் கடலின் அலை சுமார் 20 அடிக்கும் மேல் எழும்பி கடலோர மக்களுக்கு பீதியை கொடுத்தது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்று காரணமாக, திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வந்த பயணிகள் ரயில் ஒன்றும் பாம்பன் பாலம் அருகே நிறுத்தப்பட்டது. தமிழக - கேரள எல்லை பகுதியான வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, பகுதிகளில் கடல் சீற்றத்தால் சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்நிலையில் இந்திய கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள நேற்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வரை நாளை இரவு 11.30 வரை கடலில் 10 முதல் 15 அடி உயரத்திற்கு பேரலைகள் எழும்பும் என எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சுமார் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்றும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களின் நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.