நெல்லையப்பர்-காந்திமதி அம்மாள் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
காலை 9:30 மணிக்கு மேல் 10:25 மணிக்குள் நெல்லையப்பர், வேனுவனநாதர், காந்திமதி அம்பாள் மற்றும் ராஜகோபுரம், விமானங்கள், பிரதான மூர்த்திகள், சமஸ்த வேதமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நெல்லை: நெல்லையிலுள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்மாள் ஆலயத்தில் இன்று வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நெல்லையில் உள்ளது புகழ் பெற்ற நெல்லையப்பர் ஆலயம். இங்கே உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்மாளை தரிசனம் செய்ய நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.
திருநெல்வேலி என்று நகரின் பெயருக்கே மூல காரணமாக இருந்தது, நெல்லுக்கு மழையில் இருந்து வேலி அமைத்து காத்த, சிவனின் திருவிளையாடல்தான். இப்படி புகழ்பெற்ற நெல்லையப்பர் ஆலயத்தில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் கோயிலுக்கு வர வசதியாக, நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7:00 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் கோபுரம், விமானங்கள், மூலவர் சன்னதிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. காலை 9:30 மணிக்கு மேல் 10:25 மணிக்குள் நெல்லையப்பர், வேனுவனநாதர், காந்திமதி அம்பாள் மற்றும் ராஜகோபுரம், விமானங்கள், பிரதான மூர்த்திகள், சமஸ்த வேதமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த சுப நிகழ்வில், மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து, அப்பனையும், அம்மையையும் தரிசித்தனர்.