சமயபுரம் , திருவண்ணாமலை கோவில்களில் கும்பாபிஷேகம்- லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயங்களில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி : திருச்சி சமயபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் கோலகலமாக நடைபெற்றது.
அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் 6ம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. காலை 6 மணிக்கு யாக சாலை மண்டபத்தில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்து செல்லப்பட்டு காலை 7.10ல் இருந்து 7.20க்குள் மாரியம்மன் தங்க விமானம், மேற்கு, வடக்கு, தெற்கு கோபுரங்கள் மற்றும் பரிவார விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தான அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்களின் வசதிக்காக கும்பாபிஷேகத்தின்போது புனித நீரானது 42 இடங்களில் தெளிக்க வசதி செய்யப்பட்டிருந்தது. இன்று காலை முதல் இரவு 11 மணிவரை பக்தர்கள் சமயபுரம் கோயிலுக்கு வந்து கட்டணமின்றி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று உள்ளதால் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்ர் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயில் கும்பாபிஷேகம், கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இதையொட்டி 31ம்தேதி முதல் 12 கால யாகசாலை பூஜைகள் கோயில் 5ம் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான யாகசாலையில் நடந்து வருகிறது.
கடந்த 2ம் தேதி அண்ணாமலையார் கோயில் உட்பிரகாரங்களில் உள்ள பரிவாரமூர்த்தி சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கோயில் மகா கும்பாபிஷேக விழா அதிகாலை 3 மணிக்கு 12ம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
காலை 9.15 மணி அளவில், ராஜகோபுரம் மற்றும் கருவறை, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் விமானத்திற்கு கும்பாபிஷேகமும், மூலவர் கோபுரம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். அதையொட்டி, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து 1,600 சிறப்பு பஸ்கள், 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.