நாளை மகாமக தீர்த்தவாரி.. கும்பகோணத்தில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
கும்பகோணம்: கும்பகோணத்தில் நாளை மகாமக தீர்த்தவாரி நடைபெறவிருப்பதையொட்டி லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கும்பகோணமே மக்கள் கூட்டத்தில் சிக்கித் திணறி வருகிறது.
பல்வேறு ஊர்களிலிருந்து நூற்றுக்கணக்கில் சிறப்புப் பேருந்துகள் கும்பகோணத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தீர்த்தவாரியையொட்டி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் மகாமக விழா மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் மகாமக விழா தொடங்கியது.
முன்பு போல இல்லாமல் மகாமக தீர்த்தவாரியின்போது கூட்ட நெரிசலைக் குறைக்க தற்போது படிப்படியாக பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மகாமக குளத்தில் புனித நீராடி உள்ளனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நாளை நடைபெற உள்ளதால் அதில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு ஊர்களிலிருந்து நூற்றுக்கணக்கில் சிறப்புப் பேருந்துகளும் விடப்பட்டு வருகின்றன. திருச்சியில் இருந்து இன்று முதல் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் தஞ்சை, பாபநாசம் வழியாக கும்பகோணத்திற்கு செல்கிறது. மேலும் அங்கிருந்து பக்தர்கள் எளிதாக திருச்சிக்கு வரும் வகையில் இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 23ம் தேதி வரை இயக்கப்படும்.