கும்பகோணம் மகாமகம் விபத்து முதல் ராஜமுந்திரி கோதாவரி விபத்து வரை… கற்றுக்கொண்ட பாடம் என்ன?
சென்னை: ஆந்திராவின் ராஜமுந்திரி நகரின், கோதாவரி நதியில், விமரிசையாக துவங்கிய, 'மகாபுஷ்கரம்' விழாவில் புனிதநீராடிய பக்தர்கள் திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 13 பெண்கள் உட்பட, 29 பேர் இறந்தனர். இதனால், அந்த நிகழ்ச்சியில் சோகம் ஏற்பட்டது.
கடந்த 1992ம் ஆண்டு தமிழ்நாட்டில் கும்பகோணம் மகாமகம் விழாவில் புனித நீராடிய பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் பல்வேறு அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. முதல் நேற்று கோதாவரி புஷ்கரம் விழாவிலும் இதேபோன்றதொரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு சோக நிகழ்வுகளுமே மாநில முதல்வர்கள் பங்கேற்ற விழா என்பதுதான் இங்கே குறிப்பிட வேண்டிய அம்சம். இதுபோன்ற விழாக்களில் மாநில முதல்வர்கள் பங்கேற்பதன் மூலம் போலீசாரின் கவனம் முழுவதும் வி.ஐ.பி தலைவர்களை கவனிப்பதிலேயே குவிகிறது. எனவேதான் பக்தர்களை கண்காணிப்பதில் கவனச்சிதறல் ஏற்பட்டு இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதுவரை இந்தியாவில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்துக்கள்:
- 1992 கும்பகோணம் மகாமகம் விழாவில் புனித நீராடிய பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர்.
- 2003ம் ஆண்டு நாசிக் நகரில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் நடைபெற்ற விபத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.
- 2005, ஜனவரி 26 மகாராஷ்டிராவில் சத்தாரா மாவட்டத்தில் உள்ள மாந்தெர் தேவி கோயில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 350 பேர் பலியானார்கள். 200 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.
- 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி இமாச்சல பிரதேசம் நயினாதேவி கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 160 பேர் பலியாகினர்
- குஜராத் மாநிலம் பஞ்ச்கால் மாவட்டம் பவகாத் மலைப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 11 பக்தர்கள் உயிரிழந்தனர்.
- ஒடிஷா மாநிலம் பூரியில் 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் யாத்திரையின் போது நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
- 2008, செப்டம்பர் 30ல் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மலை மேல் உள்ள சாமுண்டா தேவி கோயிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவின்போது ஏற்பட்ட விபத்தில் 120 பேருக்கு மேல் பலியாகினர். 200 பேர் காயமடைந்தனர்.
- 2010, மார்ச் 4 ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் உள்ள ராம் ஜானகி கோயிலில் இலவச சேலை மற்றும் உணவு வாங்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 63 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர்.
- 2011, ஜனவரி 14 ம் தேதி கேரள மாநிலம் சபரிமலையில் மகரஜோதி தரிசனம் காணச் சென்ற ஐயப்ப பக்தர்கள் 106 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
- 2011, நவம்பர் 8ம் தேதி ஹரித்வாரில் கங்கை நதிக் கரையில் உள்ள ஹர்-கி-பாரி என்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர்.
- 2012, பிப்ரவரி 19ம் தேதி, குஜராத் மாநிலம் ஜூனகாபாத்தில் உள்ள கோவிலில் மகாசிவராத்திரி விழாவில் ஏற்பட்ட விபத்தில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.
- 2012, நவம்பர் 19ம் நாள் பீகார் தலைநகர் பட்னாவில் சாத் விழாவின்போது ஏற்பட்ட விபத்தில் 20 பேர் பலியாகினர்.
- 2013, பிப்ரவரி 10 ம் தேதி அலகாபாத் கும்பமேளாவின்போது அங்குள்ள ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியாகினர்.
- 2013, அக்டோபர் 13 மத்தியப் பிரதேச மாநிலம் தாதியாவில் உள்ள ரத்தன்கர் ஹிந்து கோயில் அருகே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் உயிரிழந்தனர். 100 பேருக்கு மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர்.
- பீகார் தலைநகர் பட்னாவில் காந்தி மைதானத்தில் நடைபெற்ற தரசா விழாவின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலியாகினர்.
- 2015, ஜூலை 14, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் ஏற்பட்ட விபத்தில் 29 பேர் பலியாகியுள்ளனர். 30 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.