கும்பகோணம் தீ விபத்து... நடிகர் சங்கம் வசூலித்த ரூ.60 லட்சம் எங்கே? கேட்கும் பெற்றோர்
சென்னை: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த, 94 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு, நிதி உதவி அளிப்பதற்காக, தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர், நடிகையரிடம் வசூலித்த 60 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க, சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக பதவியேற்றுள்ள நாசர், விஷால் ஆகிய நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும், என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கும்பகோணத்தில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். தீ விபத்து நடந்த போது சரத்குமார் தலைமையிலான நடிகர் சங்கத்தினர் கும்பகோணம் வந்து குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்களையும், காயம் அடைந்த குழந்தைகளையும் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது பேசிய சரத்குமார், நடிகர், நடிகையர்களிடம் நிதி வசூல் செய்து அளிப்போம் என்றார்.
இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன், 12 லட்சம் ரூபாய்; ரஜினி காந்த், 2 லட்சம்; விவேக், ஒரு லட்சம்; விஜய், சூர்யா ஆகியோர் தலா, 5 லட்சம் தவிர, அஜித் உள்ளிட்ட பல நடிகர்களும் நடிகர் சங்க நிர்வாகிகளிடம் அறிவித்த நிதியையும் வழங்கியுள்ளனர். நடிகர் விஜயகாந்த் மட்டும், தான் அறிவித்த, 10 லட்சம் ரூபாய் நிதியை நேரில் சென்று, பிரித்து அளித்தார்.
நடிகர்கள் அளித்த நிதி மொத்தம் ரூ. 60 லட்சம் வரை வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நிதி, இதுவரை, விபத்தில் உயிரிழந்த குழந்தைகளை இழந்த பெற்றோரிடம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெற்றோர் நலனுக்கான குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படும் இன்பராஜ், நடிகர் சங்கத்தினர், பாதிக்கப்பட்ட எங்களுக்கு நிதி உதவி அறிவித்து, வசூலித்து விட்டு, அதை வழங்காமல் எங்களின் சோகத்தில், நடிப்பை காண்பித்து விட்டனர் என்று குற்றம் சாட்டினார்.
தற்போது, புதிதாக நடிகர் சங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாசர், விஷால் உள்ளிட்ட நிர்வாகிகளாவது, எங்கள் குழந்தைகள் பெயரில், முன்பிருந்த நடிகர் சங்க நிர்வாகிகள் வசூலித்த தொகையை மீட்டு, எங்களுக்கு வழங்க வேண்டும். வசூலிக்கப்பட்ட நிதியை மோசடியாக யாரேனும் எடுத்திருந்தால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், புதிய நிர்வாகிகள் தயங்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
நடிகர் சங்க கட்டிட விவகாரத்தில் ஊழல் செய்து விட்டதாகவும், நிலத்தை குத்தகைக்கு விட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் எழுந்த புகார் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள், சரத்குமார், ராதாரவிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு வசூலித்த தொகை என்னவானது என்று கேள்வி எழுந்தால் முன்னாள் நிர்வாகிகளுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.