கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 2004 முதல் 8.6% வட்டியுடன் இழப்பீடு வழங்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை: கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் இழப்பீட்டு தொகையை 2004 ம் ஆண்டு முதல் வட்டியுடன் கணக்கிட்டு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 4 வாரத்தில் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாகினர். இதில் 16குழந்தைகள் தீ காயங்களுடன் உயிர் தப்பினர்.
தீயில் கருகி இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கும், படுகாயமடைந்த குழந்தைகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் சங்கத்தின் செயலாளர் கே.இன்பராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓய்வுப்பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து, இழப்பீடு நிர்ணயம் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, நீதிபதி வெங்கட்ராமன் ஆணையம் இழப்பீடு நிர்ணயம் செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அதில், பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.5 லட்சமும், கடுமையான உடல் காயத்துக்கு உள்ளான குழந்தைகள் கவுசல்யா, மெர்சிஏஞ்சல், விஜய் ஆகியோருக்கு தலா ரூ.6 லட்சமும், ராகுல், திவ்யா, ராஜ்குமார் ஆகிய குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சமும், சிறு காயமடைந்த மீதமுள்ள குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. மேலும், இழப்பீட்டு தொகையை ஆண்டுக்கு (இழப்பீடு கேட்டு விண்ணப்பம் செய்த நாளில் இருந்து) 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
வட்டியுடன் இழப்பீடு
இந்த இழப்பீட்டு தொகை போதாது என்று பெற்றோர் சங்கத்தினர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு 9% சதவீத வட்டியுடன் சம்பவம் நடைபெற்ற ஆண்டில் இருந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இழப்பீட்டை எவ்வாறு வழங்குவது, அது தொடர்பான நடவடிக்கை எடுப்பதற்கும், அதிக இழப்பீடு வழங்குவது தொடர்பாக பதில் அளிக்கவும் கால அவகாசம் கோரப்பட்டது.
பதில்மனு தாக்கல்
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்த தீ விபத்து நடந்தவுடன், தமிழக முதல்வர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது, பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.1 லட்சமும், தீவிர காயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும், லேசான காயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்பட்டது.
பெற்றோர்களுக்கு கவுன்சிலிங்
இதுதவிர படுகாயமடைந்த குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் நல்ல விதமாக சிகிச்சை வழங்கப்பட்டது. குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு உளவியல் நிபுணர்களை கொண்டு 'கவுன்சிலிங்' வழங்கப்பட்டன. பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு மத்திய அரசு அருட்கொடையளிப்பாக தலா ரூ.50 ஆயிரமும், காயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கியுள்ளது.
நினைவிடம்
இதுதவிர பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தமிழக அரசு தலா 400 சதுர அடி நிலம் அருட்கொடையாக அளித்துள்ளது. அதில் அந்த பெற்றோர் தற்போது வீடு கட்டி வசிக்கின்றனர். தீயில் கருகி போன சைக்கிளுக்கு பதில் புதிய சைக்கிள்களை மாணவர்களுக்கு அரசு வழங்கியுள்ளது. பலியான குழந்தைகளின் நினைவாக, உள்ளாட்சி அமைப்பு ரூ.30.50 லட்சம் செலவில் நினைவிடத்தை கட்டியுள்ளது.
வட்டியுடன் பணம்
எனவே, தற்போது நீதிபதி வெங்கட்ராமன் ஆணையம் நிர்ணயம் செய்துள்ள இழப்பீட்டு தொகையை பெற்றோருக்கும், காயமடைந்த குழந்தைகளுக்கும் வழங்கப்படும். அந்த இழப்பீட்டு தொகைக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்பட்ட வட்டி சதவீதம் வழங்கப்படும். அதாவது, இழப்பீட்டு தொகைக்கு 2004 முதல் 2011 வரையிலான நிதியாண்டுகளுக்கு 8 சதவீதமும், 2011 முதல் 2012 வரையிலான நிதியாண்டுகளுக்கு 8.6 சதவீதமும், 2012 முதல் 2016 வரையிலான நிதியாண்டுகளுக்கு 8.7 சதவீதமும் வட்டி வழங்கப்படும். மேலும், ஏற்கனவே 2004ம் ஆண்டு பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை, தற்போது வழங்கப்படும் தொகையில் இருந்து கழித்துக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
வங்கிக் கணக்கில் டெபாசிட்
இந்த பதில் மனுவை நீதிபதிகள் படித்து பார்த்தனர். அரசின் இந்த முடிவுக்கு மனுதாரர் தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை, தற்போது வழங்கவுள்ள இழப்பீட்டு தொகையில் இருந்து கழிக்கக்கூடாது என்றார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெரனல், பாதிக்கப்பட்டோரின் வங்கி கணக்குகளின் எண்களை வழங்கினால், இழப்பீடு தொகையை அந்த கணக்கில் அரசு செலுத்திவிடும் என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்ட பெற்றோர், குழந்தைகள் தங்களது வங்கி கணக்குகளின் விவரங்களை தமிழக அரசிடம் உடனடியாக வழங்கவேண்டும். அதன்பின்னர் 4 வாரத்துக்குள் அந்த வங்கி கணக்குகளில், தமிழக அரசு இழப்பீட்டு தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை முடித்துவைத்தனர்.