உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு குழந்தைகளை கொன்று குடும்பத்தை சீரழித்துவிட்டாள்:அபிராமியின் தந்தை கண்ணீர்!
உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு குழந்தைகளை கொன்று குடும்பத்தை சீரழித்து விட்டாள் என அபிராமியின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு குழந்தைகளை கொன்று குடும்பத்தை சீரழித்து விட்டாள் என அபிராமியின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
குன்றத்தூரை சேர்ந்த அபிராமி பிரியாணி கடை ஊழியருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் பெற்றக்குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்றுவிட்டு தலைமறைவானார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கேரளாவில் பதுங்கியிருந்த அவரை கள்ளக்காதலன் சுந்தரத்தை வைத்தே நேற்று முன்தினம் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
வாக்குமூலம்
இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தைகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் பல திடுக்கிடும் தகவல்களையும் அவர் வாக்குமூலமாக அளித்தார்.
தந்தை கண்ணீர்
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அபிராமிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அபிராமியின் இந்த கொடூர செயல் குறித்து அவரது தந்தை சவுந்தரராஜன் கண்ணீர் மல்க பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
மூத்த மகள் அபிராமி
எங்களது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டி. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை குன்றத்தூர் அருகே உள்ள பெரியபணிச்சேரி பகுதியில் வசித்து வருகிறோம். எனக்கு அபிராமியும், ஒரு மகனும் உள்ளனர். தற்போது தவறான பாதையில் சென்று தான் பெற்ற குழந்தைகளையே கொலை செய்த அபிராமி தான் மூத்தவள்.
நினைத்ததை அடைந்தே தீருவாள்
சிறுவயது முதலே அபிராமி என்றால் எங்கள் அனைவருக்கும் செல்லம். இயல்பாகவே மிகவும் அழகு என்பதால் அவள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து வந்தோம். அவளுக்கு பிடிவாத குணம் அதிகம். தான் நினைத்ததை அடைந்தே தீருவாள். தான் பெற்ற பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல் கொலை செய்யும் நிலை வரைக்கும் இந்த குணம் தான் அவளை கொண்டு வந்துள்ளது.
பிடிவாதமாக திருமணம்
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் அபிராமி சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் சமையல் கலை படிக்க சென்றபோது, தன்னுடன் அதே பயிற்சிக்காக வந்த, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த விஜய் என்பவருடன் பழகினார். நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. வெவ்வேறு சமூகம் என்பதால், முதலில் நாங்கள் அவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் அபிராமி பிடிவாதமாக விஜய்யை தான் திருமணம் செய்வேன் என்று சொன்னதால் வேறு வழியின்றி திருமணம் செய்து கொடுக்க சம்மதித்தோம்.
இரண்டு குழந்தைகள்
ஆனால் விஜய்யின் பெற்றோர் திருமணத்திற்கு கடைசிவரை சம்மதிக்க மறுத்துவிட்டனர். இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, விஜய் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தார். நாங்கள்தான் சென்னை குன்றத்தூரில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தோம். முதலில் சந்தோஷமாகத்தான் இருவரும் குடும்பம் நடத்தினர். இரண்டு குழந்தைகள் பிறந்தன.
முன்பு ஓடிப்போன அபிராமி
ஆனால் அபிராமியின் ஊதாரித்தனத்தால் விதி விளையாடத் தொடங்கியது. இந்தநிலையில் தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, குன்றத்தூரில் உள்ள பிரபல பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்த சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்ட விஷயம் எங்களுக்கு தெரிந்தது. அவனை சந்திக்க அடிக்கடி சுந்தரம் வீட்டிற்கே சென்று வந்தாள். கொலை நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பகூட தனது இரண்டு பிள்ளைகளையும் தவிக்க விட்டுவிட்டு சுந்தரத்தின் வீட்டில் போய் இரண்டு நாள்களாக தங்கி விட்டாள்.
புகார் கொடுத்திருந்தால்
அபிராமி-சுந்தரம் உறவு குறித்து எனக்கு தெரிய வந்தபோது, நான் சுந்தரத்தின் வீட்டிற்கு சென்று, அபிராமியை அடித்து உதைத்து, அறிவுரை கூறி, மீண்டும் கணவனுடனேயே சேர்த்து வைத்தேன். அப்பொழுதே நான் சுந்தரம் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தால், இன்று இவ்வளவு பெரிய கொலை சம்பவம் நடந்து இருக்காது.
உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு
குழந்தைகளுக்கு உணவு மற்றும் பால் கொடுத்து, எங்களது சொந்தக் குழந்தைகள் போல் பார்த்து வந்தோம். அவள் இப்படி கொலை செய்வாள் என்று நினைக்கவில்லை. அந்தப் பிஞ்சுக் குழந்தைகளைக் கொலை செய்யும் அளவுக்கு அவளுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ தெரியவில்லை. உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இரண்டு குழந்தைகளை கொன்று குடும்பத்தையே சீரழித்து விட்டாள். அவளுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும். இவ்வாறு அபிராமியின் தந்தை சவுந்தரராஜன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.