குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு.. சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ மரணம்
கோவை: குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதிக்கு சென்னையை சேர்ந்த ஒரு குழுவினரும் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு குழுவினரும் என 36 பேர் கடந்த 10 ஆம் தேதி ட்ரெக்கிங் மேற்கொண்டிருந்தனர்.
கடந்த 11ஆம் தேதி மலையில் இருந்து இறங்கும் போது அவர்கள் காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மதுரை, கோவை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த நிஷா, வித்யா விவேக், வித்யா விஸ்வநாதன், கண்ணன் உள்ளிட்ட பலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது. இந்நிலையில் கோவை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.