குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்வு.. இன்று ஒரேநாளில் 2 பேர் பலி
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.
மதுரை: குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியைச் சேர்ந்த கண்ணன், சென்னையை சேர்ந்த அனுவித்யா ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதிக்கு கடந்த சனிக்கிழமை சென்னையை சேர்ந்த ஒரு குழுவினர், ஈரோட்டைச் சேர்ந்த ஒரு குழுவினர் என மொத்தம் 36 பேர் ட்ரெக்கிங் சென்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மலையில் இருந்து இறங்கும்போது அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கினர். அவர்களில் 9 பேர் மலைப்பகுதியிலேயே தீயில் கருகி உயிரிழந்தனர்.
நேற்றுவரை 12
படுகாயமடைந்த 16 பேர் மதுரை, கோவை மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில் பலத்த காயமடைந்த நிஷா, வித்யா விவேக், வித்யா விபின் ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
கண்ணன் உயிரிழப்பு
இதனால் பலி எண்ணிக்கை நேற்றிரவு 12 ஆக உயர்ந்தது. இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கண்ணன் என்பவர் சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.
13ஆக அதிகரிப்பு
கவுந்தபாடியை சேர்ந்த கண்ணன் காட்டுத் தீயில் சிக்கி பலத்த காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 13ஆக அதிகரித்தது.
அனுவித்யா பலி
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த சென்னையை சேர்ந்த அனுவித்யாவும் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். 90 சதவீத தீக்காயங்களுடன் போராடி வந்த அவர் இன்று உயிரிழந்தார். இதன் மூலம் குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.