குரங்கணி தீவிபத்து குறித்து 2 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல்: அதுல்ய மிஸ்ரா
Recommended Video
தேனி : தேனி மாவட்டத்தில் குரங்கணியில் சுற்றுலாப்பயணிகள் 17 பேர் காட்டுத்தீயில் சிக்கி பலியாகினர். இந்த சம்பவத்தில் இரண்டு மாதங்களுக்குள் முழு விசாரணை அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்று விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி வனப்பகுதியில் உள்ள கொழுக்குமலைக்கு சுற்றுலாப்பயணிகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மலையேற்றப் பயிற்சிக்காக வந்தனர். இவர்களின் பயணத்திற்கு தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்து அழைத்து வந்திருந்தது.
பயிற்சியை முடித்துவிட்டு திரும்பும் வேளையில் காட்டுத்தீயில் அனைவரும் சிக்கினர். இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காட்டுத்தீ எரியும் சமயத்தில் இத்தனை பேர் காட்டுக்குள் சென்றதற்கு வனத்துறையின் அலட்சியமே காரணம் என்று பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வருவாய்த்துறைச் செயலர் அதுல்ய மிஸ்ராவை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளார். முதல்கட்டமாக தேனி வந்த அதுல்ய மிஸ்ரா மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், தீ விபத்து நடந்த குரங்கணி பகுதிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், வனத்துறை அதிகாரிகள் மற்றும் தீ விபத்தில் இருந்து தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தவுள்ளதாகவும், ஏற்கனவே இறந்தவர்களின் வாக்குமூலங்களையும் கொண்டு ஆராயவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக முழுமையான விசாரணை அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் தமிழக முதல்வரிடம் சமர்பிக்கப்படும் என்றும், அதைப் பொறுத்தே தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.