குரங்கணி காட்டுத் தீயில் சிக்கிய ஈரோடு சதீஷ் மரணம் - பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு வாலிபர் சதீஷ் நேற்று பலியானார். இதனால் இந்த தீ விபத்தில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
மதுரை: தேனி மாவட்டம் கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு சதீஷ் நேற்று உயிரிழந்தார். தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம், குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11ஆம்தேதி தீப்பிடித்தது. இந்த பயங்கர தீ விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக்கொண்டனர். 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 10 பேர் காயமின்றி உயிருடன் மீட்கப்பட்டனர்.
17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். மதுரை அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்திருந்தனர். நேற்று சதீஷ் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
தம்பதி பலி
ஈரோட்டில் இருந்து பிரபு என்பவர் தலைமையில் 12 பேர் சென்றனர். இவர்களில் 8 பேர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதில், கோபியை அடுத்த கவுந்தப்பாடியைச் சேர்ந்த விவேக், அவரது நண்பர் தமிழ்செல்வன் ஆகியோர் வனப்பகுதியிலேயே இறந்து விட்ட நிலையில், 90 சதவீதத்துக்கு அதிகமான தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த விவேக்கின் மனைவி திவ்யாவும் மரணமடைந்தார்.
சிகிச்சை பலனின்றி மரணம்
சென்னையில் உள்ள டயர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தமிழ்செல்வன், முகநூலில் பிரபு வெளியிட்டு இருந்த மலையேற்றும் பயிற்சி குறித்த அறிவிப்பைக் கண்டு, விவேக் - திவ்யா தம்பதியோடு சேர்ந்து மலையேற்றப் பயிற்சிக்கு சென்றுள்ளார். கவுந்தப்பாடி ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த கண்ணனும் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
காவு கொண்ட காட்டுத்தீ
ஈரோடு மலையம்பாளையத்தை அடுத்த வட்டக்கல் வலசு கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமாரின் மகள் திவ்யா, சென்னை மலையேற்றக் குழுவில் பங்கேற்று தீ விபத்தில் சிக்கி பலியானார். மேலும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த சத்யகலா மற்றும் சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி ஆகிய இருவரும் கடந்த 16ஆம்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம், சாவு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது.
17 ஆக உயர்வு
இந்த நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டை சேர்ந்த சதீஷ் குமார் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதன் மூலம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.
ரசனைக்காரன்
சதீஷ்குமார் இயற்கையை நேசிப்பவர். காட்டை ரசிக்கப் போய் காட்டுத்தீயில் சிக்கி மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்த சதீஷ்குமாரின் தந்தை ராமசாமி சித்தோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக உள்ளார். தாய் மலர்விழி என்கிற மோகனம்பாள், தங்கை பிரியா. சதீஷ்குமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இயற்கை காதலர்
சதீஷ்குமார் இயற்கை வளத்தை மேம்படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர் எனவும், பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் உறவினர்கள் கூறினார்கள். சதீஷ்குமார் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஆனால் அவருக்கு இயற்கையின் மீது அதிகமான ஆர்வம் உண்டு.
பசுமை விழிப்புணர்வு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையை ராஜினாமா செய்துவிட்டு இயற்கை வேளாண்மை செய்வதற்காக சித்தோட்டிற்கு வந்தார். அங்கு வேளாண்மை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். மேலும், ஈரோடு சிறகுகள் என்கிற தனியார் அமைப்புடன் இணைந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகளை நடுதல், பசுமையை மீட்டெடுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற சமூக பணியில் ஈடுபட்டார்.
பயணமானது
இயற்கையின் வளத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வ மிகுதியால் குரங்கணி மலைக்கு செல்ல அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் இயற்கையை உயிராக நேசித்து ரசனைக்காரனாக வாழ்ந்த சதீஷ்குமாரின் உயிரை இயற்கையே காவு கொண்டதே என்று உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறியதை பார்த்து பலரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
உடல் தகனம்
இறந்த சதீஷ்குமாரின் உடல் நேற்று மதியம் 2 மணி அளவில் சித்தோட்டில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின்னர் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.