கே பாலச்சந்தருக்கு அரசு மரியாதை அளித்திருக்க வேண்டாமா? - குஷ்பு கேள்வி
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற கே பாலச்சந்தருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடந்து இருக்க வேண்டும் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
நூறு படங்களுக்கு மேல் இயக்கிய பாலசந்தர் இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் மரணம் அடைந்தார். பெசன்ட் நகர் மயானத்தில் நேற்று முன்தினம் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
ரஜினி, நெப்போலியன், சரத்குமார், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
ஆனால் அவர் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்திருக்க வேண்டும் என்று குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'மறைந்த கன்னட நடிகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன் போன்றோரின் இறுதிச் சடங்கு பெங்களூரில் அரசு மரியாதையுடன்தான் நடந்தது.
கேரளாவிலும் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. அது போல் பாலசந்தரின் உடல் தகனமும் அரசு மரியாதையுடன் நடந்திருக்க வேண்டும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை கூட அரை குறையாகத்தான் இருந்தது.
தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சாதனையாளர்களை மதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.