ரம்பா பற்றி வதந்தி பரப்புவோரே 'ஷட் அப்'.... குஷ்பு கோபம்!
சென்னை: கனடாவுக்கு போன இடத்தில் நடிகை ரம்பாவையும், குடும்பத்தாரையும், ரம்பாவின் அழகு பெத்த பெண் குழந்தையையும் மனதார சந்தித்துப் பேசி கொஞ்சி சந்தோஷத்துடன் திரும்பியுள்ளார் நடிகை குஷ்பு.
இந்த சந்திப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் படத்துடன் போட்டுள்ள குஷ்பு, ரம்பா பற்றியும், அவரது கணவர் குறித்தும் வதந்தி பரப்புவோரையும் கண்டித்துள்ளார்.
ரொம்ப ரொம்ப சந்தோஷமாக, அழகாக குடும்பம் நடத்தி வருகிறார் ரம்பா. எனவே வதந்தி பரப்புவோர் வாயை மூடிக் கொள்வது நல்லது என்று கடித்துள்ளார் குஷ்பு.
டோரன்டோவில் குஷ்பு
குஷ்பு டோரன்டோ போயிருந்தார். திமுகவிலிருந்து விலகிய குஷ்புவுக்கு உண்மையிலேயே டோரன்டோ பயணம் பெரும் புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது என்பது அவரது டிவிட்டர் பக்கத்தைப் பார்த்தாலே புரிகிறது.
தேடி வந்த ரம்பா..
டோரன்டோ போன இடத்தில் குஷ்புவுக்கு சர்ப்ரைஸ் காத்திருந்தது. அதுதான் ரம்பா.. குஷ்புவின் கணவர் சுந்தர்.சியால் திரையுலகுக்கு அறிமுகமானவர் ரம்பா. அவரும் டோரன்டோவில் குடியிருக்கிறார் தனது கணவர் இந்திரனுடன். குஷ்பு வந்திருப்பதை அறிந்த ரம்பா உடனே அவரைத் தேடி ஓடி வந்து விட்டார்.
தோழிகள் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா
இருவரும் நெருங்கிய தோழிகளாயிற்றே.. நீண்ட நாள் கழித்துப் பார்த்ததால் அந்த இடத்தில் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. பேசித் தீர்த்து விட்டனர்.
செல்ல பொம்முக்குட்டி லான்யா
ரம்பாவின் மகள் லான்யா மீது குஷ்புவுக்கு பாசம் பொங்கி வழிந்தது. அவருடன் கொஞ்சினார். புகைப்படம் எடுத்துக் கொண்டார். ரம்பா குறித்தும், அவரது கணவர் இந்திர குமார் குறித்தும் தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமையுடனும், சந்தோஷத்துடனும் குறிப்பிட்டுள்ளார் குஷ்பு. இந்திர குமாரின் நகைச்சுவை உணர்வையும், ரம்பா குடும்பம் நடத்தும் பாங்கையும் பாசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
வதந்தி பரப்புவோரே வாயை மூடுங்க
இடையில் ரம்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஊடல் பிரியப் போகிறார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவின. அதையும் கண்டித்துள்ளார் குஷ்பு.