அழகிரி மருமகள் கண்காட்சியை திறந்துவைத்த குஷ்பு: திமுகவில் பரபரப்பு
சென்னை: தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷா சென்னையில் சில தினங்களுக்கு முன்னர் ‘வார சந்தை' என்ற பெயரில் ஒரு கண்காட்சியை நடத்தினார். இந்தக் கண்காட்சியை நடிகை குஷ்பூ திறந்துவைத்தார்.
கடந்த சிலவருடங்களாக திமுகவில் மிகவும் தீவிரமாக இருந்த நடிகை குஷ்பு, சில மாதங்களுக்கு முன்னர் அந்த கட்சியில் இருந்து திடீரென விலகினார்.
கட்சியில் தனக்குரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதால் விலகுவதாக குஷ்பு அறிவித்திருந்தாலும், கடந்த லோக்சபா தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற கோபத்தில்தான் அவர் வெளியேறியதாக கூறப்பட்டது.
மேலும் குஷ்புவை ஸ்டாலின் மற்றும் கனிமொழி தரப்பினர் வெறுத்து ஒதுக்கியதும் அவரது விலகலுக்கு ஒரு காரணமாக இருந்தது.
வாரச் சந்தை திறப்பு விழா
இந்நிலையில் சென்னையில் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதியின் மனைவி நடத்திய வாரச் சந்தையை குஷ்பு திறந்துவைத்தார்.
மகளுடன் குஷ்பு
தனது மகள் அவந்திகா உடன் கலந்துகொண்ட குஷ்பு, தயாநிதி அழகிரியிடமும் அவரது மனைவியிடமும் மனம் விட்டு பேசியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அழகிரியின் அடுத்த மூவ்
இரு தரப்புமே கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டவர்கள் என்பதால் ஒருவரின் ஆதங்கத்தை இன்னொருவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்றும், அழகிரியின் அடுத்த மூவ் குறித்து குஷ்பு கேட்டு தெரிந்து கொண்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
திமுகவில் பரபரப்பு
இந்த சந்திப்பை திமுக தலைமை மிக உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மீண்டும் அழகிரி கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
ஸ்டாலினால் ஒதுக்கப்பட்டவர்கள்
அழகிரியும், குஷ்புவும் ஸ்டாலினால் ஒதுக்கப்பட்டவர்கள். இருவரும் திமுகவை விட்டு வெளியேற ஸ்டாலின்தான் காரணம். அந்த வகையில் இந்த நட்புக்கு வலிமை உண்டு என்கின்றனர்.
திமுகவில் திருப்பம்?
அழகிரி மருமகளின் சந்தை தொடக்கவிழாவில் குஷ்பு பங்கேற்றதன் மூலம் அழகிரி கட்சிக்குத் திரும்பினால் மீண்டும் குஷ்பு திமுகவிற்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என்று பேச ஆரம்பித்துள்ளனர்.