பொதுக்குழு உறுப்பினர் பஞ்சாயத்து.. குஷ்பு - "கராத்தே" சண்டை!
5 ரூபாய் கூட கொடுத்து உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காத நடிகை குஷ்பு பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதில் விதிமீறல் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் கராத்தே தியாகராஜன்
Recommended Video
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக நடிகை குஷ்பு விதிமீறி தேர்ந்தெடுக்கப்பட்டதாக கராத்தே தியாகராஜன் புகார் தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வார்டு, கிளை கமிட்டி தலைவர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர 658 பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,, தமிழக காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது.
காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம்
658 பொதுக்குழு உறுப்பினர்கள், 72 மாவட்டத் தலைவர்கள், மாநில துணைத் தலைவர்கள், மாநிலப் பொதுச்செயலாளர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் என சுமார் 1,000 பேருக்கு எஸ்எம்எஸ் மூலம் பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தங்களது செல்போன் எண்ணுக்கு வந்துள்ள எஸ்எம்எஸ்ஐ காட்டி பொதுக்குழுவில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியமூர்த்தி பவன் பொதுக்குழு
19 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பாபிராஜூ தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு 72 மாவட்டத் தலைவர்கள், 685 பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தேர்தல் அதிகாரிகள் பாபிராஜூ, சஞ்சய் தத், துணை தேர்தல் அதிகாரிகள் சத்யன், முருகன் முனிரத்தினம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று உள்ளனர்.
அதிரடி கிளப்பும் கராத்தே
தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் திடீரென ஒரு சர்ச்சையை கிளப்பினார். தென்சென்னை மாவட்டத்தில் சிலர் 5 ரூபாய் கொடுத்து அடிப்படை உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை என்றும், 100 ரூபாய் கொடுத்து விண்ணப் படிவம் பெறவில்லை என்றும் கூறினார்.
குஷ்பு அட்டையை புதுப்பிக்கவில்லை
தென் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த குஷ்பு அடிப்படை உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை என்று கூறினார். திருநாவுக்கரசர், சிதம்பரம் உள்ளிட்டோர் கூட அடிப்படை உறுப்பினர் அட்டையை புதுப்பித்துள்ளனர். ஆனால் குஷ்பு தேர்வு செய்யப்பட்டதில் விதிமீறல் உள்ளதாக கூறினார்.
கராத்தேவிற்கு பதில் தர மறுப்பு
இந்த குற்றச்சாட்டு பற்றி தொலைக்காட்சி ஒன்றுக்கு பதிலளித்த குஷ்பு, நான் யாருடைய பேச்சையும் கேட்டு நடக்கவேண்டிய அவசியமில்லை என்றார். கராத்தே தியாகராஜன் கருத்துக்கு பதில் தரமுடியாது என்றும், அவர் ஹோம் ஒர்க் செய்து விட்டு வரவேண்டும் என்றார்.
கட்சிக்காக சேவை செய்ய வந்திருக்கேன்
அரசியலுக்கு வரும் முன்பாகவே பணம் புகழ் சம்பாதித்து விட்டேன். அரசியலை மட்டுமே நான் நம்பியில்லை. நான் வந்திருப்பது சேவை செய்ய மட்டுமே, பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை என்றும் குஷ்பு கூறியுள்ளார்.