சாய்லெட்சுமிக்கு "பை பை"... குஷ்புவுக்கு "ஹாய் ஹாய்"... ரெடியாகும் காங்.!
சென்னை: கூடிய விரைவில் தானைத் தலைவி, தங்கத் தலைவி குஷ்பு என்ற கோஷத்தை தமிழகத்தில் எதிர்பார்க்கலாம்.. காரணம், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியாக குஷ்புவை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டுள்ளன.
மும்பையிலிருந்து வந்து, தமிழ் நடிகையாக பிரபலமாகி, ஜெயா டிவியில் மேலும் பிரபலமாகி, திடீரென திமுகவில் சேர்ந்து, அரசியலில் இரண்டறக் கலந்த குஷ்பு அங்கிருந்து வெளியேறி சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் தொண்டராக மாறினார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த கையோடு அவருக்கு அது தரப் போகிறார்கள், இது தரப் போகிறார்கள் என்று பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. ஆனால் குஷ்புவுக்கு பதவி தருவதற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இரு வேறு கருத்துக்கள் தலை தூக்கியதால் அதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
குறிப்பாக சட்டசபை காங்கிரஸ் தலைவரான விஜயதாரணி, குஷ்புவுக்கு கட்சி மேலிடம் ஓவர் முக்கியத்துவம் தருவதாக பகிரங்கமாகவே புலம்பி வருகிறார், குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் அதையும் மீறி குஷ்புவின் செல்வாக்கு ஆடாமல், அசையாமல் அப்படியே உள்ளது.
காரணம், காங்கிரஸை ஆட்டிப்படைத்து வந்த ஜி.கே.வாசன் கூண்டோடு கட்சியை விட்டு விலகி விட்டதால் கட்சி மேலும் பலவீனமடைந்துள்ளது. இந்த பலவீனத்தை குஷ்பு போன்றவர்களை வைத்துத்தான் சரிக்கட்ட முடியும் என்பதால் குஷ்புவை மனம் கோணாமல் பார்த்து வருகிறது தமிழக காங்கிரஸ் மேலிடமும், கட்சி மேலிடமும்.
இந்த நிலையில் தற்போது குஷ்புவுக்கு பொறுப்பு தர கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாம். அதாவது தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக குஷ்புவை நியமிக்கத் திட்டமிட்டு வருகின்றனராம்.
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக சாய்லெட்சுமி உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிகிறது. எனவே, புதிய மகளிர் காங்கிரஸ் தலைவியை நியமிப்பது தொடர்பாக கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது.
இதையடுத்து தலைவி பதவியை் பிடிக்க பலரும் சேலையை வரிந்து கட்டி அலை மோத ஆரம்பித்துள்ளனர். விஜயதாரணி, ஹசீனா சையத், ராணி வெங்கடேசன், டி. யசோதா, ஜோதிமணி என பலரும் லாபி செய்ய ஆரம்பித்துள்ளனராம்.
இதில் குஷ்புவுக்காக கட்சித் தலைவர் இளங்கோவனே நேரடியாக மேலிடத்திடம் பேசி வருவதாக தெரிகிறது. குஷ்பு வந்த பிறகு கட்சிக் கூட்டங்களுக்கு மக்கள் அதிக அளவில் வருகிறார்கள். அவரது பேச்சுக்கள் புத்திசாலித்தனமாக, சரியான முறையில் உள்ளன. மக்களைக் கவரும் வகையில் அவர் பேசுகிறார். எனவே அவரையே மகளிர் காங்கிரஸ் தலைவியாக்க வேண்டும் என்று இளங்கோவன் கூறி வருகிறாராம்.
கட்சி மேலிடமும் இதே சிந்தனையில் இருப்பதாக தெரிகிறது. எனவே குஷ்புவுக்கே தலைவி பதவி கிடைக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
குஷ்புவுக்கு மகளிர் தலைவி பதவி கிடைத்தால், அரசியலில் இது அவருக்கு கிடைக்கும் முதல் பதவியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.