ஓபிஎஸ் தம்பிக்கு உதவியது போல மத்தவங்களுக்கும் உதவுவார்களா.. குஷ்பு பளிச் கேள்வி!
ஓபிஎஸ் தம்பிக்கு உதவியதைப் போல ஹெலிகாப்டர் அனுப்பி மற்றவர்களுக்கும் உதவுவார்களா? என குஷ்பு கேள்வியெழுப்பினார்.
டெல்லி: ஓ.பன்னீர் செல்வம் சகோதரருக்கு அவசர மருத்துவ சிகிச்சைக்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராணுவ ஹெலிகாப்டரை அனுப்பி உதவியது போல, சராசரி மனிதர்களுக்கும் உதவுவாரா என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நடிகை குஷ்பு இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் நடிகை குஷ்பு பேசியதாவது:
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சந்திக்க மறுத்துள்ளார். இதைவிட வேறு அவமானம் வேறு என்ன வேண்டும்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுக பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இது பற்றி கேட்டால், அமித்ஷா வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டார் என்று அதிமுகவினர் கூறுகின்றனர். பாஜக மற்றும் அதிமுக அரசால் தமிழகத்துக்கு எந்த முன்னேற்றம் கிடையாது.
ஓ.பன்னீர் செல்வம் சகோதரருக்கு அவசர மருத்துவ சிகிச்சைக்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராணுவ ஹெலிகாப்டரை அனுப்பி உதவியது போல, சராசரி மனிதர்களுக்கும் அவசர மருத்துவ உதவிக்காக உதவி செய்யப்படுமா என்பதி மத்திய அமைச்சர் தெரிவிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதையே நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். அதே நேரத்தில், அரசியல் சூழலுக்கு ஏற்ப தலைவர்கள் முடிவெடுப்பார்கள்.
2014 ஆம் ஆண்டிலிருந்த மோடியின் புகழ் இன்று பாதியாக குறைந்திருக்கிறது. காங்கிரஸ் திமுக கூட்டணி எந்த பிரச்சனையும் இல்லாததால் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என நான் உள்பட அனைவரும் விரும்புகிறோம். காங்கிரஸ் - திமுக கூட்டணி நீடிக்கும்"
இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.