தாலி அணிவதும் அணியாததும் அவரவர் விருப்பம்… சொல்கிறார் குஷ்பு
சென்னை: தாலி கட்டிக்கொள்வதை எப்படி எதிர்க்க முடியாதோ அதேபோல தாலியை அகற்றுவதையும் எதிர்க்க முடியாது... எதிர்க்கவும் கூடாது என்று நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கருத்து கூறியுள்ளார்.
திராவிடர் கழகம் நேற்று நடத்திய நிகழ்ச்சியில் 21 பெண்களுக்கு தாலி அகற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி, இந்து மகாசபை உள்பட 10 அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிகழ்ச்சி தாலியில் நம்பிக்கை உள்ள பெண்களின் மனதை புண்படுத்தும் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
தாலி சென்டிமென்ட் பற்றி பாட்டு பாடி பிரபலமான குஷ்பு, பெரியார் திரைப்படத்தில் மணியம்மையாக நடித்தார். அவர் அணிந்திருந்த உத்திராட்ச தாலி தமிழகம் முழுவதும் பிரபலமானது... வழக்கு போடும் அளவிற்கு போனது. கடைசியில் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் தாலி அகற்றும் நிகழ்ச்சி அவர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
பெரியார் காலத்திலேயே
பெரியார் காலத்தில் இருந்தே தாலி பற்றிய விவாதம் நடந்து வருகிறது. திராவிடர் கழகத்துக்கு ஒரு கொள்கை இருக்கிறது. அதன்படி அவர்கள் நடக்கிறார்கள்.
தாலி கட்டும் திருமணங்கள்
தினந்தோறும் தாலி கட்டிக்கொள்ளும் திருமணங்கள் நடைபெறுகின்றன. அவற்றை திராவிடர் கழகத்தினர் தடுத்து நிறுத்தவில்லை. தாலி கட்டும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தங்கள் கருத்தை பதிவு செய்யும் விதத்தில் தான் இந்த நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
தனி நபர் விருப்பம்
தாலி கட்டுவதும், மறுப்பதும் முழுக்க முழுக்க ஒரு தனி நபரின் விருப்பம். தாலி கட்டிக்கொள்ளலாமா? கூடாதா? என்பதும் தனிநபர் விருப்பம் சம்பந்தப்பட்டது.
தி.க போராட்டம் சரியா?
திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சி சரியா? தவறா? என்பது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதத்தில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதை ஏன் மற்றவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்? இது ஜனநாயக நாடு இதை வைத்து சமூகத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.