தி.மு.க. பின்னடைவுக்கு ஊழல்தான் காரணமா?: நடிகை குஷ்பு விளக்கம்
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவின் பின்னடைவுக்கு ஊழல் காரணமில்லை என்பதை மறைமுகமாகத் தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, தற்போது நேரம் மாறியிருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த 24ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் நடந்தது. அதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் அதிமுக அதிக இடங்களில் வென்று அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுகவால் ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், இன்று காலை திமுகத் தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் சந்தித்தார் நடிகையும், திமுக நட்சத்திர பேச்சாளருமான குஷ்பு.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் குஷ்பு.
அப்போது அவரிடம், தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு காரணம் குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘நாங்கள் (தி.மு.க.) ஆட்சியில் இருந்தபோது 2004 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றோம். தற்போது நிச்சயமாக நேரம் மாறியிருக்கிறது என்றுதான் சொல்லமுடியும்' எனப் பதிலளித்தார் குஷ்பு.
பின்னர் தி.மு.க.வின் பின்னடைவுக்கு ஊழல்தான் காரணமா? எனக் கேட்கப் பட்ட கேள்விக்கு, ‘அப்போது அ.தி.மு.க. படுதோல்வி அடைந்ததற்கும் ஊழல்தான் காரணம் என்று சொல்லுகிறீர்களா? என மற்றொரு கேள்வியையே பதிலாக அளித்தார்.