குற்றாலம் அருவியில் பயங்கர சத்தத்துடன் கொட்டும் வெள்ளம்... பயணிகள் குளிக்கத் தடை!
தென் மாவட்டங்களில் பெய்யும் கனமழை காரணமாக குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
குற்றாலம்: திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓகி புயல் உருவாகியுள்ளதன் எதிரொலியாக தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி,கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும்விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்போதே அதிக அளவில் காற்று வீசி வருவதாக மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரவு முதல் மழையுடன், காற்றும் வீசி வருவதாக மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கன்னியாகுமரி விரைந்துள்ளனர்.
நெல்லையிலும் கனமழை
குமரி மாவட்டம் போல நெல்லை மாவட்டத்திலும் தென்காசி, செங்கோட், குற்றாலம், வடகரை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. கனமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் காலை முதலே மழை பெய்து வருகிறது.
அருவியில் வெள்ளப்பெருக்கு
இதனால் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்டவற்றில் வெள்ள நீரி பெருக்கெடுத்து ஓடுகிறது. அருவியின் மேல் இருந்து பயங்கர சத்தத்துடன் வெள்ள நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது, இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டள்ளது.
அப்புறப்படுத்தும் போலீசார்
எனினும் அருவியின் வெள்ளப் பெருக்குக்கு அருகில் நின்று பலர் புகைப்படம், செல்ஃபி எடுத்து வருகின்றனர். அவர்களை பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.
நிர்வாகம் வேண்டுகோள்
புயல் எச்சரிக்கை காரணமாக கனமழை தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே வீண் விபரீதங்களில் பயணிகள் ஈடுபட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.