குற்றாலம் சாரல் திருவிழா தொடங்கியது.. பல்வேறு போட்டிகளுக்கும் ஏற்பாடு..
தென்காசி : குற்றாலத்தில் சாரல் திருவிழா இன்று தொடங்கியது. சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு போட்டிகளுடன் இவ்விழா வரும் 1-ந்தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது.
தொடக்க விழா குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2-ம் நாளான நாளை குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலை கண்காட்சி-2015 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு நீச்சல் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு மாலை குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. அன்று இரவு 10 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
27-ந்தேதி குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நாய் கண்காட்சியும், 28-ந்தேதி கோலப்போட்டி மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டியும் நடத்தப்படுகிறது.
29-ந்தேதி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஓவியப்போட்டியும், 30-ந்தேதி சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டியும், 31-ந்தேதி ஆணழகன் போட்டியும் நடைபெறுகிறது.
ஆகஸ்டு 1-ந்தேதி நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மாலை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் ஏற்பாடு செய்துள்ள திரைப்படம் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கு பெறும் சென்னை கலைசெல்வம், கடையம் ராஜூவின் பல்சுவை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சாரல் திருவிழாவையொட்டி குற்றாலம் கலைவாணர் கலையரங்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.