கூவத்தூரை இப்படி இந்தியா முழுக்க பிரபலப்படுத்திட்டாங்களே... சொல்கிறார் மைத்ரேயன்
தவறான உதாரணத்துக்காக கூவத்தூர், இந்தியா முழுவதும் பிரபலமடைந்துள்ளது என்று மைத்ரேயன் எம்.பி கூறியுள்ளார்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் ஒன்றிய அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் அலுவலகத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் எம்.பிரவீன்குமார் தலைமை தாங்கினார். இதில் ராஜ்யசபா எம்.பி. மற்றும் மண்டலப் பொறுப்பாளர் வா.மைத்ரேயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
டாக்டர் பிரவீன்குமார் பேசும் போது, நம்மை நன்றாக ஆட்சி செய்வார் என தொடர்ந்து ஜெயலலிதாவை முதல்வராக்கினோம். ஆனால், சதியாலோ அல்லது விதியாலோ அவர் நம்மை விட்டு மறைந்தார்.
அந்நேரம் திக்கற்று தவித்த நம்மை தலைமையேற்று நடத்திட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்வந்தார். அவரது தலைமையில் தொடர நாம் இங்கு அணி திரண்டு உள்ளோம் என்றார்.
அலுவலகத்தைத் திறந்து வைத்து பேசிய மைத்ரேயன், தவறான உதாரணத்துக்காக கூவத்தூர், இந்தியா முழுவதும் பிரபலமடைந்துள்ளது.
சசிகலாவை முதல்வர் பதவியேற்க ஆளுநர் அழைக்காதபோதும் தமிழக மக்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சசிகலாமீது மக்களிடையே அவ்வளவு எதிர்ப்பு, வெறுப்பு நிலை உள்ளது.
தினகரன், சசிகலா வெளியேற்றத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என சொல்வதற்கு ஜெயக்குமார் யார்? முதல்வர் ஏன் வாய் திறக்கவில்லை என்று கூறினார்.