வீட்டு வேலைக்கு வரும் இந்தியர்களுக்கு விசா அளிப்பதை நிறுத்திய குவைத்
சென்னை: பணிப்பெண்கள் மற்றும் பிற வீட்டு வேலைக்கு இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு விசா அளிப்பதை குவைத் அரசு நிறுத்தி வைத்துள்ளது.
வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் மற்றும் பிற வேலைகளை செய்பவர்கள் கொடுமைக்கு ஆளாவதை தடுக்க இந்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து வளைகுடா நாடுகளில் உள்ளவர்கள் இந்தியர்களை வீட்டு வேலைக்கு எடுக்கையில் வங்கியில் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கத்தை உத்தரவாதமாக செலுத்த வேண்டும் என்று இந்திய அரசு தெரிவித்தது.
இந்திய அரசின் கோரிக்கையை குவைத் ஏற்கவில்லை. இதையடுத்து வீட்டு வேலைக்கு வரும் இந்தியர்களுக்கு விசா அளிப்பதை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து குவைத் அரசு விசா அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.
இது குறித்து குவைத்திற்கான இந்திய தூதர் சுனில் ஜெயின் கூறுகையில்,
வங்கியில் உத்தரவாத பணம் செலுத்தும் கோரிக்கையை குவைத் அரசு இன்னும் ஏற்கவில்லை. இது குறித்து குவைத் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு வேலைக்கு ஆட்கள் சட்டவிரோதமாக வருவதால் அவர்களை கண்காணிக்க முடியவில்லை.
எனவே வீட்டு வேலைக்கு வருபவர்களுக்கு விசா அளிப்பதை நிறுத்தி வைக்குமாறு குவைத் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.