தன்னெழுச்சி கிளர்ச்சியாக வெடித்த மீனவர்களின் போராட்டம்... ஆட்சியர் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு!
காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி குழித்துறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் போராட்டம் தன்னெழுச்சி போராட்டமாக மாறி வருகிறது.
கன்னியாகுமரி : ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியது போல மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக நடத்தி வரும் போராட்டம் தன்னெழுச்சி போராட்டமாக மாறியது.
ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 8 நாட்களாகியும் என்ன ஆனார்கள் என்ற தகவல் இல்லாததால் கவலையில் ஆழ்ந்துள்ளனர் குமரி மாவட்ட மீனவ கிராம மக்கள். மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக அரசு சொல்லும் சமாதானங்களை ஏற்க மீனவ குடும்பத்தினர் தயாராக இல்லை.
ஏனெனில் தமிழக அரசு நடத்தும் தேடுதல் வேட்டையில் சுணக்கம் இருப்பதாக கருதுகின்றனர் மீனவ மக்கள். இந்நிலையில் குழித்துறை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக சொன்ன மீனவர்கள் பேரணியாக வந்து நண்பகல் 12 மணியளவில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்தனர்.
தொடர் போராட்டம்
கொஞ்ச நேரம் போராடி விட்டு கலைந்து சென்றுவிடுவார்கள் என்று ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் நினைத்திருப்பார்கள் போல. ஆனால் தங்கள் பிரச்னையின் வீரியத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு புரிய வைப்பதற்காக 12 மணிநேரம் தொடர் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர் மீனவர்கள்.
தன்னெழுச்சி போராட்டமாகிறது
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சிறு புள்ளியாக சென்னை மெரினா கடற்கரையில் தொடங்கிய இளைஞர்களின் போராட்டம், எழுச்சி போராட்டமாக வெடித்தது. அப்போது சிறிய போராட்டம் என்று தான் அரசு நினைத்தது ஆனால் தமிழகம் முழுவதும் இந்தப் போராட்ட தீ பரவியது.
கலைந்து செல்ல மாட்டோம்
இதே போன்று மீனவர்கள் காணாமல் போன விவகாரத்தில் வெடித்துள்ள போராட்டமும் தன்னெழுச்சி போராட்டமாக மாறியது. ரயில் நிலையம் அருகிலேயே கஞ்சி காய்ச்சி குடிப்பது, என்ன ஆனாலும் முதல்வர் வரும் வரை கலைந்து செல்வதில்லை என்று உறுதியாக நின்று 12 மணிநேரம் போராடினர் மீனவர்கள்.
புறக்கணிக்கப்படுகிறார்களா
மீனவர்களின் இந்த போராட்டம் கன்னியாகுமரி மீனவர்களுக்கானது மட்டுமல்ல கடலுக்கு சென்று காணாமல் போகும் அனைத்து மீனவர்களின் நிலையும் இது தான் என்ற குரலும் எழத் தொடங்கியுள்ளது. மற்றொருபுறம் மீனவ மக்களை இந்த அரசு புறக்கணிக்கிறதா என்ற கொந்தளிப்பும் காணப்படுகிறது.
1 மணி நேரமாக பரபரப்பு
இதனிடைய மீனவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பேச்சுவார்த்தை நடத்த வந்த மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சிங் சவானை மீனவர்களை சிறைபிடித்தனர். சுமார் 1 மணி நேரம் மீனவர்கள் மாவட்ட ஆட்சியரை சிறைபிடித்து வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.