மக்கள் நலக் கூட்டணியால் திமுகவுக்குதான் பாதிப்பு: இல.கணேசன் பேட்டி
மதுரை: மக்கள் நலக் கூட்டணியால் பாஜக கூட்டணிக்கு தேர்தலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. திமுகவுக்குத்தான் பாதிப்பு ஏற்படும் என பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
மதுரை கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கான பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவைப் போல இலங்கைத் தமிழர்களுக்கும் சமஸ்தான ஆட்சியமைப்பு தேவை என்பதை உணர்ந்தே பிரதமர் நரேந்திர மோடி அதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அந்த நாட்டு அரசும் அதற்கான முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அங்குள்ள தீவிரவாத எண்ணமுடையவர்களால் அந்த முயற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இதுகுறித்து மத்திய அரசை உள்நோக்கத்துடன் விமர்சிப்பது சரியல்ல. இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவதில் பாஜக உறுதியாக உள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் முதலில் ராகுலை முதல்வராக்குவோம் என்றார். பின்னர், தான் போட்டியிடப்போவதில்லை என்கிறார். அவரது பேச்சு முரண்பாடாக, நகைப்புக்குரியதாக உள்ளது.
மக்களவைத் தேர்தலில் எங்களுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, பாமக உள்ளிட்ட அனைத்துக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதுகுறித்து பத்து நாளில் தேசிய கட்சித் தலைமை முடிவு செய்து கூட்டணியை அறிவிக்கும்.
மக்கள் நலக் கூட்டணியால் பாஜக கூட்டணிக்கு தேர்தலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. திமுகவுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். அதிமுகவை தோற்கடிக்கவும், திமுக தலைவர் கருணாநிதியை அந்தக் கட்சியில் தனிமைப்படுத்தும் நோக்கிலே பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி கூட்டணி குறித்து கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியது குறித்து திமுகவும், அதனுடன் இணக்கமாக இருக்கும் முஸ்லீம் கட்சி, திராவிடர் கழகம் ஆகிவைதான் கவலைப்பட வேண்டும் என்றார்.