குற்றால சீசனை விடுங்க... வாட்டி எடுக்கும் குளிர், மழை சீசன் 'லா நினோ' வரப்போகுது...
சென்னை: டிசம்பர் மாத மழை வெள்ளத்தை சென்னை மக்கள் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது... அக்னி வெயில் கொளுத்தும் போது கூட மழையைப் பற்றிதான் மக்கள் பேசிக்கொண்டிருந்தனர். தேர்தல் நேரத்தில் கூட ஆளுங்கட்சிக்கு எதிராக செம்பரம்பாக்கம் வெள்ளத்தைதான் ஆயுதமாக பிரயோகித்தனர் எதிர்கட்சியினர்.
அந்த வெள்ளம் எம்மாத்திரம் கூடிய சீக்கிரம் கடும் குளிர் வாட்டப்போகுது... விடாமல் மழை கொட்டப்போகிறது லா நினோ வரப்போகிறது என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.
தென்மேற்கு பருவமழை தொடங்கப்போகிறது... குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டப்போகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி வரும் வேளையில்தான், ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளை வதைத்து வந்த எல் நினோ என்ற வறண்ட பருவமாற்றம் முடிந்து விட்டது.
அதற்காக நிம்மதி பெருமூச்சு விட வேண்டாம் தற்போது லா நினோ எனப்படும் பெருங்குளிர் மற்றும் அதிக மழை சீசன் தொடங்க உள்ளதாக உலக வானியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த லா நினோவால் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்கும் என்கின்றனர் தமிழ்நாடு வானியல் ஆய்வாளர்கள்.
வாட்டிய எல் நினோ
எல் நினோ என்ற வறட்சியான பருவமாற்றம் காரணமாக, பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை வழக்கமானதைவிட, 5 பாரன்ஹீட் கூடுதலாக உயர்ந்திருந்தது. இதனால், இந்தியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேஷியா மற்றும் தென் அமெரிக்க நாடுகள் பலவற்றிலும் கடும் மழை, சுட்டெரிக்கும் வெயில் என மாறி, மாறி கடந்த ஓராண்டாக வதைத்து வந்தது.
வெள்ளமும் வறட்சியும்
தமிழகத்தில் எல் நினோவின் உச்சமாக, 2015 டிசம்பரில் பேய் மழை பெய்தது. அதற்கடுத்தபடியாக, பல்வேறு இந்திய மாநிலங்களில் வறட்சி ஏற்பட்டு குடிநீருக்கு கூட தடுமாறித்தான் போனார்கள்.
வலிமையான எல் நினோ
கடந்த 2 ஆண்டுகளாக நிலவிய கடும் வெப்பமே, 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ள வலிமையான எல் நினோவாக கருதப்படுகிறது. இதற்கு முன் 1982 மற்றும் 1997 ம் ஆண்டுகளில் ஏற்பட்டதே கடுமையான எல் நினோ காலமாக கருதப்பட்டது.
நூறாண்டுகளில் பெய்யாத மழை
எல் நினோவின் காரணமாகவே பல பகுதிகளில் கடுமையான வறட்சியும், பல பகுதிகளில் மழையால் பெரு வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் எல் நினோ தீவிரமடைந்ததன் காரணமாகவோ சென்னையில் 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே சமயத்தில் பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டது.
கடும் குளிர்
இந்நிலையில், லா நினோ எனப்படும் குளிர்ந்த சீசன் விரைவில் பசிபிக் கடல்பகுதியில் உருவாக உள்ளது. இதன்மூலமாக, ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளில் அதிகளவு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வாட்டி வதைக்கும்
எல் நினோவைக் காட்டிலும், லா நினோ பருவமாற்றம் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில், அதிகளவு மழை பெய்து, விவசாயம் பாதிக்கப்படும் என்பதோடு, குளிரும் மக்களை வாட்டி வதைக்கும் என்றும், நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பருவமழை காலம்
ஜூன் மாதம் என்றாலே, இந்தியாவைப் பொருத்தவரையில் பருவமழை தொடங்கும் காலம். மழைக்காலத்தில் பருவநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை லா நினோ என்று குறிப்பிட்டு, வரும் பருவ ஆண்டு லா நினோ ஆண்டாக அழைக்கப்படுகிறது.
இந்த லா நினோவால், இந்தியாவில் சராசரி அளவைக் காட்டிலும் அதிகமான மழை பெய்யலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமாளிக்க தயாரா?
வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு தற்போது மழை அவசியமானதுதான். ஆனால், லா நினோவை சமாளிக்க முடியுமா என்பதுதான் இப்போது நம் முன் நிற்கும் கேள்வி.
அபாய எச்சரிக்கை
சராசரி அளவை விட அதிகமான மழை என்றால் அதனாலும் வேளாண்மை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதை மறுக்க முடியாது. இந்த லா நினோவால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்கிறது விஞ்ஞானிகள் தரப்பு. மழைக்குப் பின்னர் அடுத்து வரும் குளிர்காலத்தில், அதிகமான அளவு குளிர் வாட்டவும் செய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் பருவமழை
தற்போது துவங்க உள்ள லா நினோவால் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் நல்ல பருவமழை ஏற்படும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதிக மழையும், அதனால் வெள்ளப் பெருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.
50 சதவிகித அதிக மழை
அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். வழக்கமான மழை காலத்துடன் லா நினோவும் இணைவதால் மழை அளவு வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அரசுகள் தயாரா?
லா நினோவை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை இப்போதே துவக்கினால், கடந்த ஆண்டைப் போல அல்லாமல், ஓரளவுக்காவது மழை நீரை சேமித்து வைத்து கோடைக் காலத்துக்கு பயன்படுத்துவது எளிதாகும்.