ஈரோட்டில் பரபரப்பு.. கந்துவட்டி கொடுமை.. சாணிபவுடரை குடித்து தொழிலாளி தற்கொலை முயற்சி!
கந்துவட்டி கொடுமை காரணமாக தொழிலாளி தற்கொலை முயன்றுள்ளார்.
Recommended Video
ஈரோடு: கந்து வட்டி கொடுமையால் சுமைதூக்கும் தொழிலாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொழிலாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். ஆவின் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பத்நகரை சேர்ந்த வாசு என்பவரின் நிதிநிறுவனத்தில் கந்து வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். 15 ஆயிரம் ரூபாய் பெற்று அதற்கு வாரந்தோறும் வட்டியும் அசலும் செலுத்தி வந்துள்ளார்.
5 வாரங்கள் 7,500 ரூபாய் பணம் செலுத்தியுள்ள நிலையில் மீதி பணத்தை செலுத்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிதிநிறுவன ஊழியர்கள் பெருமாளை தாக்கியதோடு தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் சாணிபவுடரை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதனைகண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கந்து வட்டி பாதிப்பால் சுமைதூக்கும் தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.