பஸ் ஸ்டிரைக்... அரசு சார்பில் யாரும் வராததால் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
சென்னை: வேலைநிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நிகழ்த்த அழைப்பின் பேரில் தொழிலாளர் நல ஆணையத்துக்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் சென்றபோதிலும் அரசு தரப்பில் இருந்து யாரும் வராததால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதாக தொழிலாளர் நல ஆணையர் யாசிம் பேகம் அறிவித்தாா்.
ரூ.7000 கோடி நிலுவைத் தொகை பாக்கி உள்ளதால் அதை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மே 15-ஆம் முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
இதனிடையே 4 முறை முத்தரப்பு பேச்சுவார்த்தை, அதாவது போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நேற்றே ஸ்டிரைக்
இந்நிலையில் நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மேலும் ரூ.500 கோடி என ரூ.1250 கோடி நிலுவைத் தொகை அளிக்க தமிழக அரசு ஒப்புக் கொண்டது. ஆனால் ரூ.7000 கோடி நிலுவை இருக்கும்போது ரூ.1250 கோடி தருவது என்பது சரியல்ல என்று கூறி தமிழகம் முழுவதும் நேற்று முதலே வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
95 சதவீதம் முடக்கம்
சுமார் 47 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் 95 சதவீதம் பஸ்கள் இயங்கவில்லை. வெறும் 5 சதவீத பஸ்களை பயிற்சி தொழிலாளர்கள், அண்ணா தொழிற்சங்கத்தினர், தனியார் பேருந்து ஆகியோரை வைத்து இயக்கப்படுகிறது.
மீண்டும் பேச்சுவார்த்தை
இன்று ஒருநாளே மக்கள் பரிதவித்து வரும் நிலையில் இவர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடர்ந்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இதனால் தமிழக அரசு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு
சுமார் 47 தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர் நலத் துறை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஆணையர் யாசிம் பேகம் அழைப்பு விடுத்துள்ளார். இதன் முடிவில் வேலைநிறுத்த போராட்டம் குறித்து சுமூக முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
தொழிலாளர் நலத்துறையின் அழைப்பா ஏற்று பேச்சுவார்த்தைக்கு அந்த அலுவலகத்துக்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் சென்றனர். எனினும் அரசு தரப்பில் யாரும் வராததால் பேச்சுவார்த்தையை ஒத்திவைப்பதாக ஆணையர் யாசிம் பேகம் தெரிவித்தார்.