பி.இ. படிச்சு என்ன புண்ணியம்... 52% பேருக்கு வேலை இல்லை.. கிரிமினல்களாக மாறும் பரிதாபம்!
சென்னை: தமிழகத்தில் ஆண்டுக்கு 1 லட்சம் பேர் என்ஜீனியரிங் பட்டத்தை முடித்து விட்டு வெளியே வருகிறார்கள். ஆனால் அவர்களில் 52 சதவீதம் பேருக்கு வேலையே கிடைப்பதில்லை. காரணம், வெறும் ஏட்டுப் படிப்போடு வெளியே வருவதால். சரியாக ஆங்கிலம் பேசத் தெரிவதில்லை, வேலைக்கான திறனை வளர்த்துக் கொள்வதில்லை, மேலும் பல குறைபாடுகள். இதன் காரணமாக கடும் போட்டி நிறைந்த இந்த உலகத்தில் அவர்களுக்கு வேலை கிடைப்பது சிரமமாகி விடுகிறது. இதனால் அவர்களில் பலர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 52 சதவீதம் பேரும் உரிய வேலையை அடைவதில் பெரும் தடுமாற்றத்தை சந்திக்கின்றனர். அல்லது மிகக் குறைந்த சம்பளத்தில் வேலையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. தகுதிக்கேற்ற வேலயைில் அவர்கள் உட்காருவதில் பெரும் சவால்களைச் சந்திக்கின்றனராம்.
சரியான வேலை கிடைக்காமல் போவதால் பலர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நிலைக்கும் தள்ளப்படுவதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் படிக்கும்போதே தவறான பாதையில் போகும் அவலமும் அதிகரித்து வருகிறது.
கல்லூரியிலேயே முரட்டுத்தனம்
இப்படிப்பட்ட திறமைக் குறைவான மாணவர்கள் பலர் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே குரூப் சேர்த்துக் கொண்டு மற்றவர்களுடன் மோதுவது, அடிதடி ரகளை என்று ஆரம்பித்து விடுகின்றனர்.
டிஸ்மிஸ் ஆகும் அபாயம்
இப்படிப்பட்ட மாணவர்கள் பலர் பாதியிலேயே கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் ஆகி விடும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றனவாம்.
விளைவுகளைப் பற்றி யோசிக்காமல்
இப்படி பாதியிலேயே படிப்பை விட்டு விலகும் மாணவர்கள் பலர் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் குற்றப் பாதைக்குத் திரும்பி விடுகின்றனர். திருட்டு, கொள்ளை, மோசடி உள்ளிட்டவற்றில் அவர்கள் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள்.
கல்லூரிகள்தான் பொறுப்பு
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் முதல்வர் கூறுகையில், கல்லூரிகள்தான் மாணவர்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். அதிலிருந்து அவர்கள் தவறக் கூடாது. சரியாக படிக்காத மாணவர்களை படிக்க வைக்கும் அளவுக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தவறு செய்தால் தண்டிக்க வேண்டும், கண்டிக்க வேண்டும், நல் வழிக்குத் திருப்பவேண்டும்.
ஒழுங்கீனம் வளர்ந்தால்
மாறாக, ஒழுங்கீனத்தைக் கண்டு கொள்ளாமல் வளர விட்டால் அது அந்த மாணவரின் எதிர்காலத்தை கடுமையாக பாதித்து விடும். அவன் தவறான பாதைக்குச் செல்ல வழி வகுத்து விடும் என்றார் அவர்.
திறமைகளை வளர்க்க வேண்டும்
இன்னொரு கல்லூரியின் பேராசிரியர் கூறுகையில், இப்போது வெறும் பாடப் புத்தகத்தோடு மாணவர்கள் நின்று விடுகிறார்கள். படித்துப் பாஸ் செய்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் வெறும் மார்க்கை வைத்துக் கொண்டு யாரும் வேலை தருவதில்லை. பல்வேறு திறமைகளை எதிர்பார்க்கிறார்கள்.
ஆங்கில அறிவு அவசியம்
தகவல் தொடர்பு திறமையை முக்கியமாக அனைவரும் பார்க்கிறார்கள். ஆங்கிலத்தில் நல்ல புலமை இல்லாவிட்டாலும் கூட சரளமாக சக ஊழியர்களுடன் பேசும் அளவில் இருக்கிறாரா, நாம் சொல்வதைப் புரிந்து கொண்டு செய்யும் திறமை உள்ளதா, கொடுப்பதை மட்டும் செய்யாமல் சுயமாக சிந்தித்து வேலையை மெருகேற்றும் திறமை இருக்கிறதா என்று பலதையும் பார்க்கிறார்கள்.
வேலை கிடைக்காது
இப்படிப்பட்ட திறமைகள் நல்ல வேலையில் அமர முக்கியம். இவை இல்லாவிட்டால் நிச்சயம் நல்ல சம்பளத்துடன் நல்ல வேலை கிடைப்பது கஷ்டம். இதை படிக்கும்போத மனதில் வைத்துக் கொண்டு சுயமாக திறமைகளை வளர்த்துக் கொள்வதில் மாணவர்கள் ஈடுபடுவது நல்லது என்று கூறுகிறார் அவர்.
கிராக்கி குறைவு
முன்பெல்லாம் என்ஜீனியரிங் பட்டதாரிகளுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் இருந்தன. காரணம் அப்போது தேவை அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது தேவை அதிகம் இல்லை. ஆனால் ஆட்கள் அதிகம் இருக்கிறார்கள். இதுவும் கூட வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு ஒரு முக்கியக் காரணம்.
எல்லோரும் ஒரே படிப்பைப் படித்தால்...
மேலும் இப்போது பலரும் ஒரே படிப்பைத்தான் அதிகம் படிக்க விரும்புகிறார்கள். குறிப்பாக டிரிபிள் இ, இசிஇ, கம்ப்யூட்டர் சயின்ஸ் என சில படிப்புகளுக்கு மட்டுமே அதிக அளவில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அடுத்து மெக்கானிக்கலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. ஆனால் கடைசியில்தான் சிவிலுக்கு வருகிறார்கள். இதனால் ஒரு வருடத்தில் பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள் மத்தியில் குறிப்பிட்ட படிப்புக்குத்தான் அதிக அளவில் மாணவர்கள் வருகிறார்கள். இதனால் அவர்களில் யார் திறமையானவர்கள் என்பதில் போட்டி ஏற்பட்டு பெரும்பாலானவர்களுக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்படுகிறது. ஆனால் திறமையாளர்களுக்கு வேலை கிடைக்கிறது. மற்றவர்கள் நடு ரோட்டில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.
டிவி மியூசிக் இன்டர்நெட் உதவாது...!
மேலும் இப்போது இளைஞர் சமுதாயம் அதிக அளவில் இன்டர்நெட்டில் மூழ்கிக் கிடக்கிறது. பேஸ்புக் டிவிட்டர், வாட்ஸ் ஆப் என்று கவனம் திரும்பிப் போகிறது. டிவி, இசை, சினிமா, பொழுது போக்குக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால் இதெல்லாம் ஒரு கட்டம்தான். இதைத் தாண்டி வேலை என்று வரும்போது இது எதுவுமே கை கொடுப்பதில்லை என்பதுதான் உண்மை...
திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்
நன்றாகப் படியுங்கள். படிக்கும்போதே திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.. தப்புத் தப்பாக பேசினாலும் தொடர்ந்து பிற மொழிகளில் பேசி அந்த அறிவையும் பேசுங்கள்.. பிரச்சினைகளைத் தீர்க்கும் மனப் பக்குவத்தையும், முதிர்ச்சியையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.. பொழுதுபோக்கையும் தவிர்க்காதீர்கள்.. அதேசமயம், வாழ்க்கைக்கும், சிறந்த வேலைத் திறனுக்கும் என்னெல்லாம் தேவையோ அதையும் கூடவே பழகிக் கொள்ளுங்கள்.. அப்படிச் செய்யும்போதுதான் படித்து விட்டு வெளியே வரும்போது வெறும் பட்டதாரியாக மட்டுமல்லாமல் திறமைசாலியாகவும் நாம் பரிமளிக்க முடியும்.