குடிநீர் இணைப்பு கேட்டு திருவாரூரில் பெண்கள் போராட்டம்
திருவாரூர்: குடிநீர் இணைப்பு கிடைக்காததால் முத்துப்பேட்டை பேரூராட்சியை முற்றுகையிட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி 1 ஆவது வார்டு பகுதியான மருதங்காவெளி தெருவைச் சேர்ந்த சண்முகவள்ளி, புவனேஸ்வரி, அமுதா, தனம் ஆகியோர் தங்களது வீட்டுக்கு புதிய குடிநீர் இணைப்புக் கேட்டு பேரூராட்சியில் விண்ணப்பித்து பணம் கட்டியுள்ளனர்.
அவர்களது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பேரூராட்சி நிர்வாகம் கொடுத்த நாள்முதல் குடிநீர் சரியாக குழாயில் வருவதில்லை. பல சமயங்களில் குடிநீர் அறவே வராமல் இருந்துள்ளது.
இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் தண்ணீர் வருவதற்கான முயற்சியை பேரூராட்சி நிர்வாகம் செய்யவில்லை என்று தெரிகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த பெண்கள் நேற்று காலை பேரூராட்சிக்கு திறண்டு வந்து முற்றுகையிட்டு ஆவேசமாக சத்தம் போட்டனர்.
இதனால் பெரும் பரபரப்பானது. அப்பொழுது பெண்கள் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் அய்யப்பன் வீட்டில் மட்டும் குடிநீர் வருது. ஆனால் எங்க வீட்டில் வரவில்லை என்று கூச்சலிட்டனர்.
அப்பொழுது அங்கே வந்த அதிமுக பிரமுகர் அய்யப்பன் மற்றும் அவரது தந்தை குருசாமி ஆகியோர் முற்றுகையிட்ட பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது.
அப்பொழுது திடீரென்று அதிமுக பிரமுகர் அய்யப்பன் பேரூராட்சியைச் சேர்ந்த ப்ளம்பர் ஜோதியை சரமாரியமாக தாக்கினார். அப்பொழுது அங்கே நின்று கொண்டிருந்த திமுக கவுன்சிலர் சிவஅய்யப்பன் மற்றும் சிலர் தடுத்து விளக்கி விட்டனர்.
பின்னர் முற்றுகையிட்ட பெண்களை திமுக கவுன்சிலர் சிவஅய்யப்பன் சமரசம் பேசி அனுப்பி வைத்தார். பின்னர் அந்த பெண்கள் பேரூராட்சி வாசல் முன்பு நின்று பேரூராட்சி நிர்வாகத்தை குறை கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.